மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இன்று திமுகவில் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி மேலும் வலுவடைகிறது. இவர் முன்னாள் முதல்வராக இருந்ததுடன், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார். மேலும் அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வகைகளில் முயற்சித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் அவர் பாஜ போன்ற கட்சிகளில் சேராமல், மீண்டும் தன்னை திராவிட பாசறையில் இணைத்துக் கொண்டது, அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது.
தற்போது அவர் எடுத்துள்ள முடிவினால் நிதானமானவர், திராவிட தலைவர்களின் வழிவந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் எங்களுக்கு வரும் 28ம் தேதி அழைப்பு வந்தது. எனினும், அன்று நான் ஊரில் இல்லாததால், வரும் மார்ச் 2ம் தேதி சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது. இதில் எனது தலைமையில் 3 பேர் கலந்து கொள்கிறோம். இதற்காக நாங்கள் குழு அமைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
