மேற்குவங்க எஸ்ஐஆர் பணி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், முதல்வர் மம்தாவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்ஐஆர் பணியை பார்வையிட தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மேற்குவங்க கேடர் ஐஏஎஸ் அதிகாரியுமான சி.எஸ். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சி.எஸ். முருகனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.
மஹூவா மொய்த்ரா எம்பி தனது எக்ஸ் பதிவில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி நுண் பார்வையாளர்களுக்கு ரகசிய வாட்ஸ்அப் குழுக்களில் தவறான வழிமுறைகளை வெளியிடும் உங்கள் ரோல் பார்வையாளர் சி. முருகன் ஐ.ஏ.எஸ். அவரது முக்கிய பணியான தேயிலை வாரியத்தை கண்காணிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
அதில், குயிக் கன் முருகன் என்ற திரைப்படத்தின் படத்தையும் இணைத்து வெளியிட்டார். அதற்கு பதிலடியாக சி.எஸ்.முருகன் ஐஏஎஸ் எந்தவித பெயரையும் குறிப்பிடாமல், ‘படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுக்கு துப்பாக்கிகள் என்னிடம் இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் காவல் துறையில் நான்கரை ஆண்டுகால பயிற்சியின் போது, பல்வேறு வகையான துப்பாக்கிகளைக் கையாள எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவற்றை சட்டப்பூர்வமாகவும் திறம்படவும் பயன்படுத்தினேன்’ என்று பதில் அளித்துள்ளார்.
