வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லைச் சேர்ந்த 1.50 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; பாசக்கார மேற்கு மண்டலத்தில் உங்கள் எல்லாரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 200 சதவீத வெற்றியை உறுதிப்படுத்திவிட்டனர்.

செந்தில் பாலாஜிக்கு கொடுத்த மிரட்டல்களுக்கு அடிபணிய வில்லை. கோவை மண் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு கொடுத்த குடைச்சல்களை வைத்தே அவர் எந்த அளவுக்கு எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனம் என தெரிந்திருக்கும். செந்தில் பாலாஜியின் ஆற்றல் எதிரிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. செந்தில் பாலாஜி எந்த அழுத்தத்துக்கும் அடிபணியவில்லை. என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டை பிப்.11ம் தேதிக் தொடங்கினோம். நான்கு மண்டலங்களிலும் 7 லட்சம் பாக முகவர்களை சந்தித்துள்ளேன்.

உங்களுடைய கான்ஃபிடன்ஸை பார்த்து என்னுடைய கான்ஃபிடன்ஸ் லெவல் இன்னும் அதிகமாகிறது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேற்கு மண்டலத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட வரும் சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும். பல்வேறு இடர்ப்பாடுகளை கடந்து அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். கோவையில் ஐ.டி. பார்க், அவிநாசி மேம்பாலம், விசைத்தறிகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். கோவை மாவட்டத்துக்கு புதிதாக 75 மின்னணு பேருந்துகள் வர உள்ளது.

ஒவ்வொரு பாக முகவரும் 40 – 50 வாக்குகளைப் பெற்றுத் தர பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். பாக முகவர்கள் தங்களுக்குரிய இலக்குகளை அடைந்தாலே திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிடும். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி ஓய்வே கிடையாது. பிரச்சாரத்துக்கு கடைசி நிமிடம் வரை மக்களிடம் பேசிக் கொண்டே இருக்கவேண்டும். என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவம் உள்பட மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஒருநாள் முழுக்க பட்டியல் போடும் அளவுக்கு திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று நம்பிக்கையை பெற வேண்டும்; அது வாக்காக மாற வேண்டும். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த இடங்களில் இம்முறை வெற்றி பெற வேண்டும். வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருகிறது. மோடியா, லேடியா என்று கேட்ட ஜெயலலிதா அம்மையார் மீது மோடிக்கு திடீர் பாசம்; மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி தமிழகத்தில் நுழைய முயற்சிக்கிறது பாஜக. அதிமுக அரசு ஊழல் நிறைந்த அரசு என அமித்ஷா பேசியது நினைவில் இல்லையா?. தேர்தல் வருகிறது என்றுகூட பார்க்காமல் தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பாஜக அரசு ஏன் அனுமதி தரவில்லை? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முழுமையான நிதி எப்போது தருவீர்கள்? தமிழகத்தின் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்க ஏன் மறுக்கிறீர்கள்? ஒசூர் விமான நிலையத்திற்கு ஏன் அனுமதி தரவில்லை? கல்வி நிதி உள்பட ஏன் தமிழகத்திற்கான நிதிகளை விடுவிக்க மறுக்கிறீர்கள்? மாபெரும் துரோகியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டுக்கு அநியாயம் செய்யும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி 2019 முதல் கொள்கை உறுதியுடன் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. என்.டி.ஏ சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் பாஜக.

பத்துத் தோல்வி பழனிசாமி, மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தன்னை காப்பாற்றிக் கொள்ள என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளார். ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டப் பார்க்கின்றனர். பாஜகவின் அரட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிய நாங்கள் கோழைகள் அல்ல என்று கூறினார்.

Related Stories: