சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். துணை முதல்வர், நிதி அமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து தர்மயுத்தம் நடத்திய நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செலவம், கட்சி இணைய வேண்டும் எனக் கூறிவந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
அண்மைக்காலமாக திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன், ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் பேரவை செயலாளரை நேரில் சந்தித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐயப்பன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
