×

இந்திய விவசாயிகளுக்கு விரோதமான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மோடி ரத்து செய்யத் தயாரா: ராகுல் காந்தி சவால்

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடந்த விவசாயிகளுடனான சந்திப்பு பேரணியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் விவசாயம், ஜவுளி, இறக்குமதி துறைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி சமரசம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கிக் கொண்டார். அழுத்தத்தின் காரணமாக அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது வர்த்தக ஒப்பந்தம் அல்ல. விவசாயிகளின் இதயத்தில் குத்திய அம்பு.

இந்த ஒப்பந்தம் 4 மாதங்களாக முடங்கியிருந்தது. ஆனால் பிரதமர் மோடி திடீரென அதற்கு ஒப்புக்கொள்ள சம்மதித்தார். இதில் என்ன நடந்தது? இதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம், அமெரிக்காவில் வெளியான லட்சக்கணக்கான எப்ஸ்டீன் கோப்புகள். அதில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக பிரதமர் மோடி அச்சுறுத்தப்பட்டுள்ளார். மோடி தங்களின் பேச்சை கேட்காவிட்டால் கோப்புகளில் உள்ள ஆதாரங்கள் வெளியிடப்படும் என அமெரிக்கா மிரட்டி உள்ளது.

இன்னொரு காரணம், அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு. இந்த வழக்கின் இலக்கு அதானி அல்ல. பிரதமர் மோடிதான். அம்பு அதானிக்கு எதிராக இல்லை. அது மோடியை குறிவைக்கிறது. இந்த 2 காரணங்களால் தான் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வந்துள்ளது. தைரியம் இருந்தால் மோடி இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து காட்டட்டுமே. அப்படி அவர் செய்ய மாட்டார்.

ஏன் என்றால் எப்ஸ்டீன் கோப்புகள் மீதும், அமெரிக்க வழக்கு மீதும் அவருக்கு இருக்கும் பயம், அவ்வாறு செய்வதிலிருந்து அவரை தடுக்கிறது. போருக்கு செல்வது என்பது அரசியல் ரீதியான முடிவு. ராணுவத்தின் முடிவு அல்ல. ஆனால் நமது அரசு முக்கியமான நேரத்தில் ராணுவ தலைமையை கைவிட்டு விட்டது. சீன டாங்கிகள் இந்திய எல்லையை நெருங்கும் போது நடந்த சம்பவங்களை முன்னாள் ராணுவ தளபதி நரவனே தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்.

அந்த நாளில் இந்திய அரசும், பிரதமரும், அவரையும், ராணுவத்தையும் கைவிட்டதாக நரவனே புத்தகத்தில் எழுதி உள்ளார். ராணுவ தளபதிக்கு உத்தரவிட்டு, சீனாவை நிறுத்த வேண்டிய நேரம் வந்த போது பிரதமர் மோடி மறைந்துவிட்டார். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘எனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற கோழைத்தனமான பிரதமரை பார்த்ததில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட அவர் நடத்தியதில்லை. ஆனால் காங்கிரசை மிரட்டி பயமுறுத்த பார்க்கிறார். கோழைகளே நீங்கள் அனைவரும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்கள். உண்மையான தேசபக்தர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்’’ என்றார்.

Tags : Modi ,US ,Rahul Gandhi ,Bhopal ,Bhopal, Madhya Pradesh ,Lok Sabha ,Opposition Leader ,India ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!