திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால் கேரளா ஸ்டோரி 2 படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத்தை இன்று பார்க்க கேரள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கேரளா ஸ்டோரி 2 என்ற படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் சில பெண்கள் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தப் படத்தின் டீசருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க கோரி கண்ணூரை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி பெச்சு குரியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியது: கருத்து சுதந்திரம் இருப்பதால் நான் பொதுவாக சினிமா காரியங்களில் தலையிடுவதில்லை. ஆனால் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று கூறி கேரளாவின் பெயரை பயன்படுத்தும் போது அது மோதலுக்கு வழிவகுக்கும். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஒன்றிய அரசு வகுத்த வழிமுறைகளின்படி படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக நாளை (இன்று) இந்தப் படத்தை பார்க்க தீர்மானித்துள்ளேன். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இருப்பதாக மனுதாரர் அஞ்சுவதால் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் டீசருக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
