×

ஏஐ மாநாட்டில் நடந்த போராட்டத்தின் எதிரொலி இளைஞர் காங். தலைவர் திடீர் கைது: கோழைத்தனத்தின் பிரதிபலிப்பு என ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சட்டையை கழற்றி தங்கள் பனியனில் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களுடன் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, பீகாரைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் கிருஷ்ணா ஹரி உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்த நிலையில், இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் உதய் பானு சிப் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஏஐ மாநாட்டு போராட்டத்தில் தொடர்பு இருப்பது தொடர்பாக சிப்பிடம் விசாரிக்க அவரை கைது செய்ததாக டெல்லி காவல்துறை கூறியிருக்கிறது. உடனடியாக சிப் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதை கண்டித்து, டெல்லி அலுவலகத்தில் இளைஞர் காங்கிரசார் அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தீவிரமடைவதை தடுக்க டெல்லி முழுவதும் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாரத் மண்டபத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நிலையில் உதய் சிப் கைது செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘அமைதியான போராட்டம் காங்கிரசின் வரலாற்று பாரம்பரியம். ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமையும் கூட. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் தேச நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் ஜவுளித் தொழிலுக்கும் தீங்கு விளைவிக்கும். நமது தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். இந்த உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகார போக்குகள் மற்றும் கோழைத்தனத்தை பிரதிபலிக்கிறது.

காங்கிரஸ் கட்சியும் நானும் எங்கள் சக உறுப்பினர்களுடன் உறுதியாக நிற்கிறோம். அதிகாரத்திற்கு சத்தியத்தின் கண்ணாடியைக் காண்பிப்பது குற்றமல்ல, அது தேசபக்தி. பயப்பட வேண்டாம் – உண்மையும் அரசியலமைப்பும் நம்முடன் உள்ளன’’ என கூறி, ‘நான் இளைஞர் காங்கிரசுடன் நிற்கிறேன்’ என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ‘‘மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் கோபம் நிலவுகிறது. அவர் டிரம்பிடம் நம்மை அடிமைப்படுத்தி, கொத்தடிமைத்தனத்திற்கு தள்ளுகிறார். மோடி ஒரு கோழை. அவர் நம்மை மிரட்ட முயற்சிக்கிறார். நமது இளம் தலைவர்களை மிரட்டப் பார்க்கிறார். அது நடக்காது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்றார்.

* ராகுல் காந்தி தான் மூலகாரணம்: பாஜ
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் தான் இளைஞர் காங்கிரசார் ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தி உள்ளனர். எனவே இந்த அராஜக சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் ராகுல்காந்தி தான். ராகுல் காந்திக்கும், முரடர், குண்டர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டை அவமதிக்க முயன்ற நபர்கள், யாராக இருந்தாலும் சட்டத்தின் நீண்ட கரங்கள் விரைவில் அவர்களை சென்றடையும்’’ என கூறி உள்ளார்.

Tags : AI ,Youth Congress ,Rahul Gandhi ,New Delhi ,AI Summit ,Bharat Mandapam ,Delhi ,Union government ,Modi ,US ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!