×

நாடு முழுவதும் இலவசமாக 14 வயது சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவசமாக எச்பிவி புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவில் தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் 2வது மிகவும் பரவலான புற்றுநோயாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 42,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின்றன.

மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் எச்பிவி வகைகள் 16 மற்றும் 18 வைரஸ்களின் தொடர்ச்சியான தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதாக அறிவியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. இதை தடுப்பூசி மற்றும் ஆரம்பகால பரிசோதனை மூலம் பெருமளவில் தடுக்க முடியும். எனவே, பெண்கள் மற்றும் இந்திய குடும்பங்கள் மீது தொடர்ந்து பெரும் சுமையை சுமத்தி வரும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவசமாக எச்பிவி புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவில் தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி மிகவும் வலுவாக பயனளிக்கும். பொதுவாக 2 அல்லது 3 டோஸ்கள் பரிந்துரைக்கப்படும் நிலையில், இந்த தேசிய திட்டத்தின் கீழ் எச்பிவி வகைகள் 16, 18 மற்றும் வகை 6, 11க்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் குவாட்ரிவேலன்ட் ஒற்றை தடுப்பூசி போடப்படும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளும், அதிக ஆபத்துள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளின் (குறிப்பாக HPV வகைகள் 16 மற்றும் 18) தொடர்ச்சியான தொற்று காரணமாக ஏற்படுகின்றன என்பதை அறிவியல் சான்றுகள் நிறுவுகின்றன,

இவை இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்குக் காரணமாகின்றன. இந்த தடுப்பூசி திட்டம் எச்பிவி தொற்று, புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே தடுத்து பாதுகாப்பை வழங்கும். இது அனைத்து அரசு சுகாதார மருத்துவ மையங்களிலும் கிடைக்கும் வகையில் இருக்கும் என்றும், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் 14 வயது மகள்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய முன்வர வேண்டுமெனவும் அரசு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

* வெளிச்சந்தையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு 2 டோஸ் எச்பிவி தடுப்பூசி தலா ஒவ்வொன்றும் ரூ.3,927 விலையில் வழங்கப்படுகிறது.
* இந்த தடுப்பூசி 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 26 வயது வரையிலான பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 டோஸ் தேவை.
* 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசி உலகளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள்
செலுத்தப்பட்டுள்ளது.
* இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதும், தேசிய நோய்தடுப்பு பட்டியலில் எச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்திய 160 நாடுகளில் இந்தியாவும் இணையும்.

* தமிழ்நாட்டை காப்பி அடித்த மோடி அரசு
பெண்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு முன்னோடியாக ஏற்கனவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி விட்டது. கடந்த மாதம் 27ம் தேதி, சென்னையில் நடந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில், பள்ளி மாணவிகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு காப்பி அடித்துள்ளது.

Tags : Union government ,New Delhi ,India ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!