*பதற்றமில்லாமல் எதிர்கொள்ள டிஇஓ அறிவுரை
வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.தமிழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இம்மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கி 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும்.
காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரு வேளைகளில் செய்முறைத்தேர்வு நடைபெறும். செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். செய்முறை தேர்வு கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வேறு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.
செய்முறைத் தேர்வு முடிந்த பின்னர் மார்ச் 2ம் தேதிக்குள் அரசுத் தேர்வுத் துறை உதவி இயக்குநரிடம் மதிப்பெண் பட்டியலை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை எல்எப்சி அரசு நிதியுதவி பள்ளியில் நேற்று 323 மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட டிஇஓ கிளாடிசுகுணா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவிகளிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் தயக்கமின்றி, பதற்றமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மனப்பாடம் வேண்டாம் புரிந்து கொள்ளுங்கள்
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும். செய்முறை தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு சோதனையின் நோக்கம், தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை ஆகியவற்றை மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொள்ள வேண்டும்.
பதற்றப்படாமல் நிதானமாக செய்தாலே செய்முறை தேர்வை முடிக்கலாம். எழுத்துத்தேர்வுக்கும் மனப்பாடம் செய்வதைவிட புரிதல் என்பது அவசியம். ஒரு தேர்வு முடிந்தால், அதைப்பற்றி சிந்திக்காமல் மாணவர்கள் அடுத்த பாடத்துக்கு தயாராவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மூளைக்கு தூக்கம் அவசியம்
தேர்வு நேரத்தில் இரவு முழுவதும் கண்விழித்து படிப்பதால் மறுநாள் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படும். தூக்கம் என்பது மூளைக்கு அவசியமான ஒன்று. நேரத்தை திட்டமிட்டு படிப்பதோடு, தேர்வு நாட்களில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
தூக்கம் குறைந்தால் படித்தது மறந்து போகும், பதற்றம் அதிகரிக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் தூங்குவதோடு, எளிதில் ஜீரணிக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
