சென்னை: அதி தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு உள்ளார் என ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101). சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தூணாக விளங்கியவர். அவரது நீண்டகால அரசியல் பங்களிப்பு தொழிலாளர், விவசாயிகள் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. தற்போது வயது முதிர்ச்சி காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதி தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு உள்ளார் என ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திருப்பில்; நல்லகண்ணு (வயது 101) நோய்த்தொற்று மற்றும் இணைநோய்களால் ( இரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று 23.02.2026 அன்று அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
