சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலை மற்றும அறிவியல் கல்லூரி, அமுதம் நியாயவிலை கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வடசென்னையை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்றும் விதமாக வடசென்னையை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு நலதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடசென்னை பகுதியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி பெரம்பூர், மாதவரம், திருவெற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவிக நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகள் மற்றும் முதலமைச்சரின் கொளத்தூர் உள்பட 10 தொகுதிகளை மேம்படுத்தும் விதிமாக வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சமூக கட்டமைப்பு, பொழுதுபோக்கு வசதிகள் என்று அனைத்து தரப்பிலும் இந்த வளர்ச்சியை கொண்டு சேர்க்கும் விதமாக சுமார் ரூ.6,800 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக முதலமைச்சரின் சென்னை கொளத்தூர் தொகுதியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். இதற்காக சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நேரடியாக கொளத்தூர் தொகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில்மகேஷ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
