×

சட்டமன்ற தேர்தலில் போட்டியா?: குஷ்பு பரபரப்பு பேட்டி

 

சென்னை: எங்கள் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அது முடிவான பின்பு தான், நான் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது முடிவு செய்வேன் என நடிகை குஷ்பு கூறினார். பாஜ மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேமுதிக திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளனர். அது அவர்களின் விருப்பம். அரசியலில் கூட்டணி என்பது யார் யார் உடன் வேண்டுமானாலும், கூட்டணி அமைத்துக் கொள்ளலாம், அதேபோல் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. இதனை சொல்லிக் கொடுத்ததே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை, திமுகவுடன் கூட்டணி அமைத்ததே கிடையாது. தற்போது அவர்கள் கூட்டணி அமைத்து உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை நினைத்தால் பாவமாக உள்ளது. தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்கள் என்று முயற்சித்து வருகிறார். திமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. இவர்கள் எப்படி, மாதம்தோறும் மகளிர்களுக்கு 2,000 ரூபாய் கொடுக்கப் போகிறார்கள்? தேர்தல் நேரத்திலே வாகனங்கள், பணம், டிவி, லேப்டாப் பொது வெளியில் வைத்து கொடுக்கின்றனர். காவல்துறை இதனை கண்டுகொள்ளவில்லை. திமுகவுடன் காங்கிரஸ் உறுதியாக கூட்டணியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இரு கட்சிக்கு இடையே தொடர்ந்து பிரச்னைகள் போய்க்கொண்டு உள்ளது. நடிகர் விஜய், காங்கிரசுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளே, விரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடுகள், பேச்சு வார்த்தைகளுக்கு பின்பு அறிவிக்கப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறது. எனவே அவசரம் இல்லை. சட்டமன்ற தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. எந்த இடத்தில் நின்று வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். கூட்டணிக்குள் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை. அதன் பிறகு தான் நான் போட்டியிடுகிறனா இல்லையா என்பதை சொல்ல முடியும். எங்களுக்கு சீட்டு வழங்கினால்தான் வேலை செய்வோம் என்பது கிடையாது. பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த ஒரு நோக்கம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. இவ்வாறு குஷ்பு கூறினார்.

 

Tags : Kushbu ,Chennai ,BAJA STATE ,VICE ,PRESIDENT ,
× RELATED திமுகவுக்கு சாதகமான நிலை எடுத்துள்ள...