×

என் மனச ரொம்ப புண்படுத்திட்டாங்க…பாஜவில் சேர்ந்த மாஜி காங். தலைவர் விளக்கம்

 

அசாம மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பூபேன் போரா. கட்சியில் 32 ஆண்டுகள் இருந்த அவர், கடந்த 16ம் தேதி காங்கிரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால், உடனடியாக அசாம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், போராவை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்னர் போரா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக ஜிதேந்திர சிங் அறிவித்தார். அவருடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மறுநாளே போராவை சந்தித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போரா பாஜவில் சேர உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், கவுகாத்தியில் மாநில பாஜ தலைவர் திலீப் சைக்கியா முன்னிலையில் நேற்று பூபேன் போரா பாஜவில் இணைந்தார். அவருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமார் ஜோஷி, கங்கன் தாஸ் உள்ளிட்டோரும் பாஜவில் இணைந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பூபேன் போரா, ‘நான் பாஜவில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸை விட்டு வரவில்லை. கட்சியில் நடக்கும் தவறுகளைச் சுயபரிசோதனை செய்து திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், என்னை கடந்த திங்கட்கிழமை நேரில் வந்து சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் எனது உணர்வுகளையும், அசாம் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டனர’ என்றார். பூபேன் போராவை வரவேற்ற முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘32 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு கட்சியை விட்டு வரும்போது ஒருவித கசப்புணர்வு இருப்பது இயல்புதான். இன்று முதல் அவருக்கு பாஜவில் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது; அவருக்கு உரிய மரியாதையையும் அன்பையும் பாஜ வழங்கும்’ என்றார். 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், மாநிலத் தலைவராக இருந்த ஒருவரே ஆளுங்கட்சிக்குச் சென்றிருப்பது காங்கிரசுக்குப் பலவீனமாக கருதப்படுகிறது.

 

Tags : Congress ,BJP ,Bhupen Bora ,Assam State Congress Party ,
× RELATED திமுகவுக்கு சாதகமான நிலை எடுத்துள்ள...