ரீல்ஸ் மோகமும் குற்றச்சாட்டுகளும்!

நன்றி குங்குமம் தோழி

கேரள மாநிலம் கண்ணூரில், பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர், தன்னோடு பயணித்த சக பயணி, தன்னிடம் தவறான எண்ணத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காணொளி ஒன்றை பதிவேற்றி வெளியிட, சற்று நேரத்திலேயே அந்தக் காணொளி 20 லட்சம் வியூவ்ஸ்களைத் தொட்டது. குறிப்பிட்ட காணொளியில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும், இந்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, அவர் மன உளைச்சலுக்கு உள்ளானதுடன், கருத்துப் பகுதியில் பதிவிடப்பட்டிருந்த பொதுமக்களின் கருத்துக்களும் அவருக்கு மன உளைச்சலைத்தர, தற்கொலை செய்து கொண்டார்.

காணொளி வெளியிட்ட பெண்ணிற்கு எதிராக, கேரள மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு வலுக்கவே, ரீல்ஸ் மோகத்தில் அப்பெண் வீடியோ வெளியிட்டு, குறிப்பிட்ட நபரை தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து பெண்ணை கைது செய்திருக்கிறது.நவீன தொடர்பு சாதனங்களை வைத்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்களா? அல்லது கிடைக்கும் சில பல லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ்களுக்காக, ரீல்ஸ் மோகத்தில் விழுந்து கிடக்கிறார்களா? இதை எப்படி பார்ப்பது என்கிற கேள்விகளோடு சிலரை அணுகியதில்…

ஓவியா, சமூக திறனாய்வாளர் ‘‘நாம் வாழுகின்ற சமூகம் மனிதர்களை அரவணைத்து, ஒரு சமூக மனிதனாக வாழ வைப்பதற்கான தகுதியை இழந்துகொண்டே வருகிறது என்றே சொல்வேன். இதுவொரு பண்பாட்டின் வீழ்ச்சி. சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதில் சில முறைமைகள், சில பண்பாடுகள் இருக்க வேண்டும். ஆண், பெண் பிரச்னைக்கு மட்டுமின்றி, பொதுவான பாதிப்புகள் அனைத்துக்கும் முறையான இடங்கள் இருக்கின்றன. அந்த இடத்திற்கு சென்றுதான் நீதி கேட்க வேண்டும். குறிப்பிட்ட அந்தப் பெண்ணிற்கு நீதி கேட்கும் உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. இதுவொரு ரீல்ஸ் மோகத்தில் வரும் அற்ப மகிழ்ச்சி.

குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணியத்தை குறைத்து, குற்றம் சாட்டி, சின்னா பின்னப்படுத்தி அவமானப்படுத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. 40 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில், ஒரு தனி மனிதனின் கௌரவமும், கண்ணியமும் ஒரே நாளில் தொலைந்து போகும் என்றால், கண்டிப்பாக அந்த மனிதன் இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவே செய்வான். குற்றவாளியாகவே இருந்தாலும் அவரின் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும்.

பிரச்னை என்று வரும்போது சமூகம் தனி மனிதர்களை அனாதை ஆக்குகிறது. இதுமாதிரியான செயல்களை ஊக்குவிக்கக் கூடிய சமூகம் இருப்பதும் கவலைக்குரியது. இப்படி மனிதர்களை பரிதவிக்க விடக்கூடாது. பாலியல் குற்றச்சாட்டுகள் மீது இந்த சமூகம் கொடுக்கிற அதீத அக்கறையும் ஒரு பாலியல் குற்றம்தான். இதை முற்போக்கு பேசுபவர்களும், பெண்ணியம் பேசுபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாலியல் அவதூறுகளை மையமாக வைத்து இயங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு மனிதனை பாலியல் அவதூறுகள் மூலம் வீழ்த்த முடியும் என்றால், அந்த அவதூறு என்னும் ஆயுதம் ஆணாதிக்க ஆயுதமே தவிர, பெண்ணிற்கான ஆயுதம் அல்ல. பாலியல் அவதூறுகளை மையப்படுத்தி செய்யப்படுகிற செயலில் 90 சதவிகிதம் ஆணாதிக்கத்தின் பக்கமாகவே திரும்பும். இனி உண்மையாகவே இடிக்கும் நபரை ஒரு பெண் தட்டிக் கேட்கும் போது, அவருக்கு கிடைக்கும் ஆதரவு குறையும். தப்பு செய்பவர்கள் பக்கம் நியாயம் போகும். பெண்ணிற்கு கிடைத்த சுதந்திரவெளி சுருங்கும்.ஈவ் டீசிங் தடுப்பு சட்டம் தேவைப்பட்டது போல், சமூகவலைத்தள டீசிங் தடுப்பு சட்டத்திற்கான அனைத்து தேவையும் இன்று இருக்கிறது.’’

உஷா நந்தினி, மனநல மருத்துவர்

‘‘பெண்களை பொது இடங்களிலும், பேருந்துகளிலும் பாலுணர்ச்சியோடு அணுகுவதும், தகாத முறைகளில் நடந்து கொள்வதும் இன்றும் தொடர்கதையாக நடக்கும் விஷயம்தான். பல ஆண்டுகளாகவே பெண்கள் இதனை அனுபவிக்கிறார்கள். ஆனாலும், வெளியில் பேசமுடியாத நிலையில் கண்டும் காணாமல்தான் நகர்ந்து செல்கிறார்கள். இதுவொரு சமூகச் சிக்கல். இதில் அந்த ஆண் எடுத்த முடிவை Impulsive decision அதாவது, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்றே சொல்வேன்.

அதாவது, எடுத்தோம் கவுத்தோம் மனநிலை. அல்லது என்னை பற்றி தப்பா பேசிட்டாங்க. நான் இருந்து என்ன ஆகப்போகுது என்கிற விரக்தி மனநிலை. ஒரு இரண்டு நாள் பொறுத்திருந்து இதை எப்படி எதிர்கொள்வது என தனது லாஜிக்கல் ப்ரையின் (logical brain) அல்லது ராஷ்னல் ப்ரையினை (rational brain) பயன்படுத்தி யோசிக்கும் முன்பே இறப்பை தழுவிவிட்டார். ஒரு எதிர்ப்பை எதிர்கொள்ளும் மனநிலை அவரிடத்தில் இல்லை. ஆண்கள் சமூகத்தின் மீதான தாக்குதல் என வரும்போது இதுதான் பதிலா. இதை அவர் இன்னும் கொஞ்சம் மெச்சூடாக அணுகி இருக்கலாம்.’’

சுதா தியாகு, வழக்கறிஞர்

‘‘ தமிழகத்தில் தற்போது வருகிற பேருந்துகளில் எமர்ஜென்சி பட்டன் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்புக்கு ‘காவல் உதவி’ செயலி இருக்கிறது. கேரள மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன மாதிரியான சிஸ்டம் இருக்கெனத் தெரியவில்லை. இந்தப் பெண்ணுக்கு உண்மையிலே இப்படி நடந்திருந்தால், இதுமாதிரியான வழிகளை அப்பெண் கையாண்டிருக்கலாம். அல்லது பொது மக்களை உதவிக்கு அங்கேயே அழைத்திருக்கலாம். அல்லது காவல் துறையை அணுகி, வழக்கு பதிவு செய்திருக்கலாம்.

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் ஒரு உயிர் போனதை ஏற்க முடியாதுதான். ஆனாலும், இதுவொரு அரிதான வழக்கு. அந்தப் பெண்ணிற்கு இதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதிகபட்சமாகவே இருக்கிறது. இதில் அந்தப் பெண்ணை மட்டும் குற்றவாளியாக்கி, கைது செய்து, இந்த அளவு கொண்டு போய் இருக்க வேண்டாம்.

இதைவிடக் கொடுமை கேரள மாநிலத்தில் ஆண்கள் அட்டைப் பெட்டி எடுத்துச் செல்வது. பாலியல் வக்கிரங்களால் பெண்கள் இறந்த போது இந்த ஆண்கள் என்ன செய்தார்கள். பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் இறந்த சம்பவங்களும் நடந்ததுதானே. வீடியோ பார்த்து வெங்காரம் சாப்பிட்டு பெண் இறந்துவிட்டார் என்பதற்காக வீடியோ போட்டவரை தண்டிக்க முடியுமா?

இன்று எந்தவொரு முன் தடுப்பு நடவடிக்கையும் சமூக ஊடகங்களுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் போடலாம். பார்க்கலாம். அரசு ஏன் இந்த மாதிரியான காணொளிகளை தடை செய்வதில்லை. இது அரசு குற்றம் இல்லையா? பள்ளிகளும் ரீல்ஸ் போடுபவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கிறார்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருகிறார்கள். இவற்றையெல்லாம் ஏன் அரசு ஒழுங்குப்படுத்துவதில்லை.’’

டாக்டர் சுனில் குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

‘‘குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு, ஆண்கள் ஜாக்கிரதையா பயணிக்கணும். பெண்கள் ஆபத்தானவர்கள். ஆண்கள் மீது பழிபோட்டு சிக்கவைப்பார்கள் என்பது மாதிரியான மீம்ஸ்கள் தொடர்ச்சியாய் கேரள மாநிலத்தை தாண்டி பக்கத்து மாநிலங்களிலும் பரவுகிறது. பெண் தனக்கு நடந்ததை வெளிப்படுத்தும் போது, இழிச்செயல் செய்தமாதிரியான குற்ற உணர்ச்சிக்கு அவரை உட்படுத்தும் செயலாகவே இதை நான் பார்க்கிறேன்.

இதன் மூலம் மக்கள் மனதில் ஒரு கருத்துருவாக்கத்தை உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கும் நோக்கம் இருப்பதாகவும் உணர்கிறேன். அதாவது, உணர்ச்சிவசப்பட வைத்து, கருத்துருவாக்கத்துக்கு வலு சேர்ப்பது. கருவில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. இன்றும் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
என்.சி.ஆர்.பி தரவுகளும் இதைத்தான் காட்டுகிறது.

பெரும்பாலும் பாலியல் அத்துமீறல்கள் பெண்ணிற்கு அவரின் 14 வயதிற்கு முன்பே நடக்கிறது. ஆனால், தனக்கு நடந்த பாலியல் கொடுமையை பெண் வெளியில் சொல்லும் சராசரி வயது 51. வெளிப்படையாய் சொல்லும் தைரியமும், தன்னம்பிக்கையும், 51 வயதில்தான் பெண்ணிற்கே வருகிறதென புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அப்படியென்றால் இத்தனை ஆண்டுகளும் அந்த வலியையும், ஞாபகத்தையும் மௌனமாகவே அனுபவித்தபடி பெண்கள் கடக்கிறார்கள்.

இதனை உடைக்க வேண்டும் என்பதே என் கருத்து. பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தணும்… உரக்கச் சொல்லணும்… புகாரளிக்கணும். அப்போதுதான் அத்துமீறல்கள் குறையும்.தனக்கு நடக்கும் அநீதியை பதிவு செய்யும் போது, ஆதாரங்களை சேகரிக்கணும். ஆனால், கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து நீதி பெற வேண்டும்.’’

ஆஷா, இன்ப்ளூயன்சர்

‘‘இந்தச் செய்தியை பார்த்த போது முதலில் எனக்கு கோபம் வந்தது. நானும் பஸ் டிராவல் நிறைய பண்ணியிருக்கேன். என்கிட்டயும் ஆண்கள் நிறைய மிஸ் பிகேவ் பண்ணியிருக்காங்க. ஒரு பெண் பொது பேருந்துகளில் பயணிக்கும் போது இவற்றையெல்லாம் கடந்தே பயணிக்க வேண்டியிருக்கு. ஆனால், கேரள பெண் விஷயத்தில் அவர் செய்தது புனையப்பட்ட(fabricated) பொய்யான வீடியோ. அந்த பேருந்தில் பயணித்ததை தவிர அந்த நபர் எந்த தப்பும் செய்யவில்லை. தன்னுடைய வியூவ்ஸ் அண்ட் ரீல்ஸுக்காக ஒரு அப்பாவியை அந்தப் பெண் பயன்படுத்திக் கொண்ட விஷயமாகவே பார்க்கிறேன்.

பொது இடத்தில் அடுத்தவர் அறியாமல் வீடியோ எடுப்பது, பிரன்ட் கேமராவில் எடுத்தால் தெரிந்துவிடும் என்பதற்காக பேக் கேமராவை பயன்படுத்தி எடுப்பது எல்லாம் ரொம்பத் தவறான செயல். பெண்கள் எவ்வளோ முன்னேறி செல்லும் இந்தக் காலத்தில் என்னை சீண்டுறாங்க… நோண்டுறாங்க என வீடியோ போடுவதெல்லாம் ரொம்ப ஓவர். ஒரு இன்புளூயன்சராக இது மிகவும் அசிங்கமான விஷயம். அதிலும் ஒரு பெண் தன்னையே விக்டிம் கார்டாக பயன்படுத்தியதில் வெட்கப்படுகிறேன்.வியூவ்ஸ்காக ஒரு மனிதரை பயன்படுத்திக்கொள்வதோ, இல்லை அந்த இடத்தை பேப்ரிக்கேட் பண்ணுவதோ ரொம்ப தவறான செயல். இதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.’’

ஜி.மஞ்சுளா, மாநிலத் தலைவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

‘‘அந்தப் பெண் தன்னை வெளிப்படுத்துகிற தற்காலத்திய செல்போன் மோகமும் இதில் உள்ளடங்குது. அந்த ஆண் தவறு செய்திருந்தால் குறிப்பிட்ட இடத்திலே நியாயம் கேட்டு, பொது மக்கள் முன் அவரை தண்டிச்சுருக்கலாம். இது சமூக வலைத்தளத்தில் காணொளியாகச் செல்லும்போது சம்பந்தப்பட்ட ஆணுக்கு பெரிய தாக்கம் ஏற்படத்தான் செய்யும். எல்லோருக்குள்ளும் இது கெட்ட அபிப்பிராயத்தை உண்டு பண்ணும் எனும்போது மன உளைச்சல் உருவாகத்தான் செய்யும்.

மற்றவருக்குத் தெரியாமல் வீடியோ எடுப்பது, போன்காலை ஒட்டுக் கேட்க வைப்பது போன்ற செயல்கள், மோசமான மனிதப் பண்புகளின் சீரழிவு. இது உயிரையே பறிக்கிற அளவுக்கு வெளிப்பட்டு இருக்கு. இதுவொரு மோசமான முன் மாதிரி. இதை நாம் ஆதரிக்க முடியாது. கட்டாயமாக எதிர்க்க வேண்டும்.அதேசமயத்தில் இன்றைய இளம் பெண்கள் இதைப் போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும்போது, சைபர் கிரைமிற்கு தெரிவிக்க வேண்டும் என்பது குறித்த புரிதலை, பெண்கள் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், இது போன்றவற்றை சில பெண்கள் முறையாக காவல்துறைக்கு தெரிவித்தாலும், அதன்மீதான நடவடிக்கை குறித்து பெண்களுக்கு நம்பிக்கை தன்மையையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

தண்டனையை மன்னிப்பதற்கான விஷயமாகத்தான் நமது சட்டம் வைக்கிறது. உயிரையே பறிக்கிற அளவுக்கான பாலியல் சம்பவங்கள் நடந்து அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தும்கூட, நாம் சட்டப் போராட்டங்கள்தான் நடத்தியிருக்கிறோம். கம்யூனிச இயக்கங்கள் ஆளும் கேரள மாநிலத்தில், அந்தப் பெண்ணே ஆணின் தற்கொலைக்கு நேரடியான காரணம் என்ற அளவில் கைது செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. பெண்களுக்கு பிரச்னைகளை கையாள்வதற்கான சரியான வழிகாட்டுதலும், அதேசமயம் காவல்துறை மற்றும் அரசு தன் பொறுப்பை கை கழுவி வெறும் தனிநபரின் பிரச்னையாக மாற்றுவதும் முறையற்றது.’’

Related Stories: