என் மகளுக்கு தாய்ப்பாலை சிரெஞ்சில்தான் புகட்டினேன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். அதில் ஒருவரை காப்பாற்ற முடியாமல் போனது. மற்ற குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால், அவளுக்கு பார்த்து பார்த்து உணவுகளை நானே தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதுதான் இப்போது என்னுடைய முழு நேர தொழிலாக மாறியுள்ளது’’ என்கிறார் சாதனா ராஜு. இவர் ‘பிரஷ்லி கிரவுண்ட்’ என்ற பெயரில் பழனி அரிக்கப்பட்டி என்ற ஊரில் சத்துள்ள உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு ஐ.டி துறையில் கிட்டத்தட்ட 12 வருடம் வேலை பார்த்தேன். திருமணமானது. நான் கருவுற்றேன். இரட்டை குழந்தைகள். பொதுவா 40 வாரங்கள் கருவில் வளர்ந்த பிறகுதான் குழந்தை பிறக்கும். ஆனால், என்னுடைய இரண்டு குழுந்தைகளும் 26 வாரத்திலேயே பிறந்துட்டாங்க. ஆண் குழந்தை 710 கிராம், பெண் குழந்தை 525 கிராம் எடையில் இருந்தாங்க. முப்பது நாள் தீவிர பாதுகாப்பில் இரண்டு குழந்தைகளும் இருந்தாங்க.

29ம் நாள் மருத்துவர்கள் ‘ஆண் குழந்தை பிழைப்பது சந்தேகம், அதனால் அந்த ஒரு குழந்தையை மட்டும் நீங்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போயிடுங்க’ன்னு சொன்னாங்க. என் அண்ணன் அரசு மருத்துவமனை மருத்துவர் என்பதால், அவர் இரண்டு குழந்தைகளையும் டிஸ்சார்ஜ் செய்துவிட சொல்லிட்டார். பிறகு இரண்டு குழந்தைகளையும் அரசு மருத்துவமனையில் வைத்து பார்த்தோம். ஆனால், சில நாட்களில் ஆண் குழந்தையை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. பெண் குழந்தையும் பிறந்த போது எந்த எடையில் இருந்தார்களோ அதே இடையில்தான் இப்போதும் இருந்தாங்க. அவங்கள மூணு மாசம் மருத்துவமனையில் வைத்திருந்து பிறகுதான் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

எதிர்ப்பு சக்திக் குறைவு. தாய்ப்பாலைக் கூட பம்ப் செய்து சிரெஞ்சில்தான் புகட்டுவோம். ஒன்பது மாதம் இப்படித்தான் அவங்கள ரொம்பவே கவனமா பார்த்துக் கொண்டோம். அப்போது டாக்டர் என்னிடம், ‘இதன் பிறகு நீங்க கொடுக்கும் உணவு மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணும். இல்லைன்னா மறுபடியும் மருத்துவமனையில் அட்மிஷன் போட வேண்டி இருக்கும். உணவு மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரே தீர்வு’ன்னு சொல்லிட்டார். குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணும். எடை கூட்டணும். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’’ என்றவர் அதன் பிறகு குழந்தைக்கான ஆரோக்கியமான உணவுகள் குறித்த ஆய்வில் இறங்க ஆரம்பித்துள்ளார்.

‘‘குழந்தையை கூட இருந்து பார்த்துக்கணும் என்பதால் வேலையை ராஜினாமா செய்தேன். குழந்தைக்கான தனிப்பட்ட உணவுகளை நானே தயாரிக்க ஆரம்பித்தேன். அதை சாப்பிட்ட பிறகு பாப்பாவின் எடையும் கூட ஆரம்பித்தது. பாப்பாவும் நன்கு வளர ஆரம்பித்தாள். அதைப் பார்த்து நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘இதையே நீ பிசினஸா செய்து கொடுத்தால் நாங்களே அதை வாங்கிக் கொள்கிறோம்’ என்று சொன்னார்கள். மேலும், நான் பாப்பாவோட மருத்துவமனையில் இருந்த போது இரண்டு மாசம் வென்டிலேட்டரில்தான் வைத்திருந்தாங்க.

அப்ப டாக்டர் என்னிடம், ‘இதற்கு மேல் குழந்தை வென்டிலேட்டரில் இருந்தா அவளின் மூளையில் பாதிப்பு ஏற்படும்’னு சொன்னது மட்டுமில்லாமல் வென்டிலேட்டரை கழட்டி என்னிடம் கொடுத்துவிட்டார். அதன் அளவு 100 வரும் போது வென்டிலேட்டரை எடுக்க சொன்னார். மீண்டும் 95ஐ நெருங்கும் போது வென்டிலேட்டரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்றார். அந்த ஐந்து வினாடி நாம் மூளைக்கு தானாக சுவாசிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தால் மூளை சுவாசிக்கும் பணியை செய்ய ஆரம்பிக்கும்னு சொன்னார். இல்லைன்னா குழந்தையால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிப்பது சிரமமாகிவிடும்னு சொல்லிட்டார்.

பாப்பா மருத்துவமனையில் இருந்த போது நிறைய குழந்தைகளை வென்டிலேட்டரில் வைத்திருப்பாங்க. அதனால் என்னுடைய உணவினை பிரத்யேகமாக குழந்தைகளின் நலனுக்காகவே தயாரிக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் மற்ற குழந்தைகளும் பலன் அடைவார்கள் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இதில் நிறமிகள், பதப்படுத்தப்படும் பொருட்கள் எதுவுமே சேர்ப்பதில்லை. ஆரம்பத்தில் ஐந்து உணவுகள் தான் செய்து வந்தோம். தற்போது 150க்கும் மேற்பட்ட உணவுகளை தயாரித்து வருகிறோம். பாப்பாக்கு எந்த உணவு எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது, எடை கூட செய்தது என்பதை நாங்க கண்கூடாக பார்த்திருக்கிறோம்’’ என்றவர், ஊட்டச்சத்து குறித்து படித்து அதன் பிறகு மேலும் சில உணவுகளை தயாரித்துள்ளார்.

‘‘நான் ஊட்டச்சத்து குறித்து படித்து இருந்ததால், எந்த காம்பினேஷனில் உணவுகளை தயாரித்தால் குழந்தைகளுக்கு நல்லது என்று பார்த்து பார்த்து ஒவ்வொரு உணவினையும் தயாரித்து வருகிறேன். எங்களின் எந்த உணவிலும் வெள்ளை சர்க்கரை, மைதா, உப்பு எல்லாம் சேர்ப்பதில்லை. அப்படியே உணவில் இனிப்பு சுவை வேண்டும் என்றால் நாட்டுச்சர்க்கரை, பனச் சர்க்கரை, உலர்ந்த பேரீச்சைப்பழ பவுடர்தான் சேர்க்கிறோம்.

என் குழந்தையின் வயிறு கேமரா பிலிம் அளவில்தான் இருக்கும். இவங்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடையாது. மேலும், உணவு செரிமானமாகணும். அப்போது நான் ஆய்வு செய்த போது எந்த தானியங்களை முளைக்கட்டி பயன்படுத்துகிறோமோ அதன் செரிமான தன்மையை அதிகரிக்கும். அதனால் நான் முளைக்கட்டிய பயிர்கள் கொண்டு சத்துமாவு செய்தேன். நேந்திரன் வாழைக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

எடையும் கூட உதவும் என்பதால் அதை காயவைத்து அரைத்து கஞ்சியாக கொடுத்தேன். கருப்பு தோள் உளுந்தினை முளைக்கட்டி கஞ்சி தயாரித்து கொடுத்த போது குழந்தையின் எலும்பு பலமானது. அதன் பிறகு முளைக்கட்டிய ராகியில் இருந்து பால் எடுத்து அதை பவுடராக்கி அதையும் கொடுத்தேன். இதற்கு இனிப்பு பேரீச்சையை காய வைத்து பொடித்து பயன்படுத்தினேன். இந்த உணவுகளை கொண்டுதான் முறையாக பிசினஸை ஆரம்பித்தேன்.

முதலில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றேன். அதன் பிறகு கண்காட்சி போன்ற இடங்களில் ஸ்டால்கள் அமைத்தோம். அப்போது ஒரு வாடிக்கையாளர் என்னிடம், ‘உங்களிடம் உள்ள உணவுப் பொருட்களை சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வளர்ந்த குழந்தைகளுக்கான தனிப்பட்ட ஆரோக்கிய உணவுகளையும் தயாரிக்கலாமே’ என்று கேட்டுக் கொண்டார். அவர்களுக்காக வெரைட்டி மிக்ஸ் வகை உணவுகளை தயாரிக்க ஆரம்பித்தேன்.

ஏபிசி மிக்ஸ், பேன் கேக் மிக்ஸ், நூடுல்ஸ், சேமியா, பாஸ்தா, குக்கீஸ், லட்டு, மிக்சர், முறுக்கு, அதிரசம் எல்லாம் தயாரிக்க ஆரம்பித்தோம். அதில் 80% சிறுதானியங்கள் கொண்டுதான் தயாரித்தோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் தேவையை எங்களிடம் சொல்ல அதற்கேற்ப உணவுகளை நாங்க தயாரிக்க ஆரம்பித்தோம். அதே சமயம் நான் ஒவ்வொரு உணவுகளை தயாரிக்கும் போதும் அதற்கான பயிற்சியும் எடுத்தேன்’’ என்றவர், பொருட்களை தயாரிக்க தனிப்பட்ட யூனிட் ஒன்றை அமைத்து அங்குதான் அனைத்துப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் இந்தத் தொழிலை ஆரம்பித்து மூன்றரை வருடமாகுது. ஆரம்பத்தில் ஸ்டால் அமைத்து அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பேசிதான் பொருட்களை விற்பனை செய்தோம். எங்க உணவுகளை பிடித்துப் போனவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் வாய் வார்த்தையாக சொன்னார்கள். அப்படித்தான் எங்களின் வாடிக்கையாளர் வட்டம் அதிகரித்தது. அதன் பிறகு முழுக்க முழுக்க சமூக வலைத்தளம் மூலம் மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.

தற்போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு தனிப்பட்ட உணவுகளை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன். இதன் மூலம் அவர்களின் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ளவும், தாய்ப்பால் சுரக்கும் வகையில் உணவினை தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். இந்த உணவுகளை ஆய்வுகள் செய்வது மட்டுமில்லாமல் அதிலுள்ள ஊட்டச்சத்துகளையும் கணக்கிடுகிறோம். மேலும், சோலார் டிரையர் மூலமாகத் தான் பொருட்களை காய வைப்பதால் பொருட்கள் சுத்தமாக இருக்கும்’’ என்றார் சாதனா ராஜு.

தொகுப்பு: ஷன்மதி

Related Stories: