நன்றி குங்குமம் தோழி
கைவினை நம் நாட்டின் முக்கிய அடையாளம். இன்றும் கலைஞர்கள் நம் நாட்டின் 5000 ஆண்டு கைவினைப் பாரம்பரியத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். மாடர்ன் உலகினால் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் இவர்களின் கைவண்ணத்திற்கு என தனிப்பட்ட அடையாளங்களை பார்க்க முடிகிறது. சிந்து சமவெளி நாகரீகம் முதல் இன்று வரை மண்பாண்டங்கள், நெசவு மற்றும் உலோக வேலைப்பாடுகள் மூலம் இந்தியாவின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து வரும் இவர்களை கவுரவிப்பதற்காகவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களுக்காகவே தேசிய அளவில் சங்கம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சந்தை அமைத்து அவர்களுக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வந்துள்ளார் முன்னாள் சமதா கட்சியின் தலைவரும், ஆர்வலரும், எழுத்தாளரும், இந்திய கைவினைப் பொருட்கள் கண்காணிப்பாளருமான ஜெயா ஜெட்லி அவர்கள்.
இவர் 1986ம் ஆண்டு ‘தஸ்த்கரி ஹாத் சமிதி’ என்ற கலை மற்றும் கைவினை அமைப்பினை நிறுவினார். இதன் மூலம் கைவினை கலைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறனை வளர்த்து, சந்தையினை வருடா வருடம் அமைத்து, அவர்களுக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு ஜனவரி 30 முதல் இம்மாதம் 5ம் தேதி வரை சென்னையில் உள்ள NIFT வளாகத்தில் இச்சந்தை நடைபெற்று வருகிறது.
அது குறித்து ஜெயா ஜெட்லி அவர்கள் பகிர்ந்தார்.‘‘நான் இந்த அமைப்பினை 40 வருடங்களுக்கு முன் துவங்கினேன். அந்த சமயத்தில் கைவினை கலைஞர்களுக்கு நேரடியாக வாடிக்கையாளர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. தங்களின் தயாரிப்புகளை அங்குள்ள லோக்கல் கடைகளில் மட்டுமே விற்பனை செய்து வந்தார்கள். இதனால் இவர்களின் திறமைக்கான ஊதியம் அவர்களுக்கு நேரடியாக கிடைக்காமல் இருந்தது. நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து தங்களின் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதற்காகவே இந்த அமைப்பினை துவங்கினேன்’’ என்றவர், துவக்கத்தில் தில்லியில் உள்ள கலைஞர்களை கொண்டுதான் இந்த அமைப்பினை அமைத்துள்ளார்.
‘‘நான் தில்லியில் ஆரம்பித்த போது ஒரு ஆய்வு செய்தேன். அதில் 90க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பற்றி தெரிய வந்தது. என்னுடைய இந்த அமைப்பினை பற்றி தெரிந்து கொண்டு பலர் இதில் சேர முன்வந்தார்கள். மேலும், நான் குஜராத் அரசின் கலைத்துறையில் இணைந்து செயல்பட்டதால், அங்குள்ள பல கலைஞர்கள் பற்றியும் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களும் இதில் சேர முன்வந்தார்கள். இப்படி இந்தியா முழுதும் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தற்ேபாது இந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் உறுப்பினர்களாக இருக்க விரும்பும் கலைஞர்கள் நேரடியாக எங்களை அணுகலாம். அதற்கான அறிவிப்பினை நாங்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அறிவிப்போம். தங்களின் தயாரிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். அதனை தயாரிப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், கைவினை கலைஞர்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையினை பெற்றிருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு அதை பெற நாங்க உதவியும் செய்கிறோம். உறுப்பினர்களாக இணைந்த பிறகு எங்களின் அமைப்பு சார்பாக நடைபெறும் சந்தையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்.
வருடத்திற்கு நான்கு சந்தைகள் நடைபெறும். அதில் இரண்டு முறை ஒரு கலைஞர் பங்கேற்கலாம். காரணம், அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். அதே சமயம் சந்தையில் பங்கு பெறாதவர்களுக்கு நாங்க வேறு வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகிறோம். ஒவ்வொரு வருடமும் உறுப்பினருக்கான கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், சந்தையில் இடம் பெறுபவர்கள் அதற்கான குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம். மேலும், சந்தையில் அவர்கள் விற்பனையில் 10% அமைப்பிற்கு செலுத்த வேண்டும்’’ என்றவர், ஆரம்ப காலத்தில் கலைஞர்களை நேரடியாக சந்தித்து இது குறித்து விவரித்துள்ளார்.
‘‘இது முழுக்க முழுக்க கலைஞர்களால் கலைஞர்களுக்காக செயல்படும் சந்தை என்பதால், அவர்கள் தங்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம் என்ற திட்டம் அவர்களை மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் அவர்களின் பொருட்களை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும் என்பதால் ெபண்கள் உட்பட பலர் சேர முன்வந்தார்கள். பத்து நாட்கள் நடைபெறும் சந்தையில் தங்களின் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இடைத்தரகர்கள் இல்லை என்பதால், நேரடியாக மார்க்கெட் நிலவரத்தை புரிந்து கொண்டார்கள். அதற்கேற்ப தங்களின் பொருட்களில் புதுமையை புகுத்தினார்கள். யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிந்து கொண்டார்கள். தரமான பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்தார்கள். சிலர் இங்கு வந்த பிறகு அவர்கள் குழுவாக இணைந்து தனியாக சந்தையினை நடத்தவும் செய்தார்கள்’’ என்றவர், சென்னையில் ஏன் பத்து வருட இடைவெளி என்பது குறித்து விவரித்தார்.
‘‘பத்து வருடம் முன்பு வரை நாங்க ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சந்தை அமைத்து வந்தோம். ஆனால், அதன் பிறகு எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதி இங்கு கிடைக்காமல் போனது. மேலும், ஒரு சந்தையில் குறைந்தபட்சம் 80 கைவினை கலைஞர்கள் தங்களின் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். அதற்கான போதிய இடவசதி அமையவில்லை. NIFT வளாகத்தில் அதற்கான அமைப்பு இருப்பதால் இந்த வருடம் முதல் சென்னையில் எங்களின் சந்தை தவறாமல் இடம் பெறும் என்று நம்புகிறோம். பத்து வருட இடைவேளை என்பதால், சென்னையில் மிகவும் பிரமாண்டமாக அமைக்க இருக்கிறோம். 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.
இதனை மூன்று பிரிவாக பிரித்திருக்கிறோம். பாரம்பரியக் கலையில் பிச்வாய், கோந்த், காலிகட், பாட்டசித்ரா போன்ற ஓவியங்கள் இடம் பெற உள்ளன. ஜவுளி பிரிவில் அஜ்ரக் பிளாக் பிரின்டிங், ஷிபோரில பத்திக், காந்தா எம்பிராய்டரி, இக்கத், சந்தேரி, ஜம்தானி நெசவுகளை காணலாம். டேக்ரா, மூங்கில், சிப்பிகள், மண்பாண்டங்கள், கண்ணாடி வளையல்கள், சணல் பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்களும் உள்ளன. இத்துடன் மேற்குவங்க சாவ் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் பாரம்பரிய ராஜஸ்தானிய உணவுகளும் இடம் பெற்றுள்ளது’’ என்றார் ஜெயா ஜெட்லி.
தொகுப்பு: ஷம்ரிதி
