நன்றி குங்குமம் தோழி
ரோமானிய அரசின் ஆட்சிக் காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டாம் கிளாடிஸ் ஆட்சி புரிந்த போது தனது படை வீரர்களுக்கு முட்டாள்தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ரோமாபுரி நாட்டில் இனி எவரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட சொன்னான்.
ஏற்கனவே உறுதி செய்த திருமணங்களும் ரத்தானது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்பட்டு, பொது இடத்தில் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள் என்றானாம்.இதைக் கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சியானார்கள். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வர தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகிறார்கள். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான். பாதிரியார் ‘வாலண்டைன்’ என்பவர் அரசனின் அறிவிப்பை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரண தண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையிலிருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறை தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். அந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் அவரின் தலை துண்டிக்கப்பட்டது.
அந்த நாள் 270வது ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி. வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது ‘பாகான்’ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ், வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.
