ரோஜா மலரே ராஜகுமாரி…

நன்றி குங்குமம் தோழி

மனிதர்கள் எல்லோரது வாழ்விலும் பிறப்பு தொடங்கி இறப்பு வரை பயணிப்பவை பூக்கள். எல்லா மனிதர்களுக்கும் மதங்களுக்கும் பொதுவான பூக்களைத்தான் நம்முடைய மகிழ்ச்சி மற்றும் துக்கம் இரண்டுக்குமே துணையாக அழைக்கிறோம். பூக்களை கொண்டாடாத கவிஞர்களே இல்லை. பூக்கள் என்றாலே அழகு என்றாலும், அதில் ரோஜா பூக்களின் ராணி என்று தான் சொல்ல வேண்டும். ரோஜா மலருக்கு என்றுமே அதிக மவுசு இருந்தாலும், குறிப்பாக பிப்ரவரி மாதம் மட்டும் சிவப்பு ரோஜாக்களுக்கு மவுசு கூடிவிடும். காரணம், காதலர்கள் தங்களின் அன்பினை ரோஜாவினை கொடுத்து பகிர்ந்து கொள்வார்கள். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்றால், அதே மாதம் 7ம் தேதி ‘ரோஸ்டே’வாகவும் கொண்டாடுகிறார்கள்.

‘‘பிப்ரவரி மாதம் காதலர்களுக்கு மட்டுமல்ல… ரோஜாக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் சிறப்பானது. லாபத்தில் 50% பிப்ரவரி மாதத்தில் மட்டுமே கிடைப்பதாக கூறுகின்றனர். அதுவும் வார நாட்களில் காதலர் தினம் வந்தால் மார்க்கெட் உச்சம் அடையும் என்று கூறும் விவசாயிகள் உலக சந்தையில் ஓசூர் ரோஜாக்களுக்குத் தான் வரவேற்பு அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். அந்த நாளுக்காக இந்தப் பகுதியிலிருந்து 60 லட்சம் மலர்கள் வரை ஏற்றுமதி ஆகும். அதன் நிறம், தரம், ஆயுள் காரணமாகவே இந்த வரவேற்பு இருக்கிறது’’ என்கிறார் ஓசூர் ‘சிவ சக்தி பிளாரிடெக்’ நிறுவனர் பால சிவ பிரசாத். ரோஜாக்கள் ஏற்றுமதியில் பிசியாக இருந்தவரிடம் பேசியதிலிருந்து…

‘‘எனக்கு சொந்த ஊர் திருத்தணி பக்கத்தில ஒரு சிறிய கிராமம். அக்காவை ஓசூர்ல கல்யாணம் முடிச்சு கொடுத்தோம். அப்பதான் ஓசூருக்கு எம்.சி.ஏ படிக்க வந்தேன். இங்க வந்ததும் இந்த காலநிலை, பசுமை சூழல் எல்லாம் எனக்கு பிடிச்சுப் போனது. திருத்தணியில் இருந்த சொந்த வீட்டை விற்று ஓசூர்லயே வீடு வாங்கி செட்டில் ஆகிட்டோம். படிப்புக்கேற்ற வேலை கிடைத்தது. அதில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். கணினி சார்ந்த வேலையை ஒரு வருடம் பார்த்தேன்.

ஒருவருக்கு கீழ் வேலை பார்க்க பிடிக்காமல் கணினி விற்பனை சார்ந்த பிசினஸ் செய்தேன். அதுவும் சரியாக அமையவில்லை. எங்க வீடு பக்கத்துலயே எங்களுக்கு சொந்தமான இடத்துல சிறிய அளவில் பூக்கள் தோட்டம் வைத்திருந்தோம். ரோஜா, கிளாடிரோஸ், சாமந்தி போன்ற பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்தோம். அப்பதான் பூக்களை பத்தியே தெரியும். நான் பூக்கள் விவசாயம் செய்ய முடிவெடுத்தேன்.

அதிகம் படிச்சதால வீட்ல யாரும் ஒத்துக்கல. விடாப்பிடியாக நின்னு தொழில் ஆரம்பித்தேன்’’ என்று தொழிலில் முதல் அடி எடுத்து வைத்தது குறித்து பகிர்கிறார் பால சிவ பிரசாத்.

‘‘ஹைடெக் பாலி (Poly) ஹவுஸ் ஃபார்மிங் பிரபலமாகி இருந்த சமயம் அது. அதற்கு வங்கிக் கடன், 50% மானியத்துடன் தருவதாக கேள்விப்பட்டு முதன்முதலாக பத்து லட்ச ரூபாய் வங்கியில் கடன் பெற்று பாலி ஹவுஸ் அமைத்தேன். இந்தக் கடனை பெறவே ஒரு வருடம் ஆச்சு. பிறகு மீண்டும் 2008ல் 35 லட்ச ரூபாய் கடன் பெற்று மூன்று தனித்தனி குடில்கள் மூலம் ரோஜா உற்பத்தி செய்ய துவங்கினேன். ஒரு தடவை குடில் அமைத்தால் 20 வருடங்கள் வரை பயன்படுத்தலாம்.

அவ்வப்போது பராமரித்தால் மட்டும் போதும். தற்போது இதேபோல் அமைக்க இரண்டு கோடி வரை செலவாகும். ரோஜாக்களிலேயே சிவப்பு ரோஜாக்களுக்குத்தான் வரவேற்பு அதிகம் என்பதால் நாங்கள் 65% வரை சிவப்பு ரோஜாக்களைதான் நடவு செய்வோம். மீதி 35% மற்ற கலர் ரோஜாக்களை நடவு செய்வோம். கோயம்புத்தூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால் என்பவர்தான் எனக்கு பெரிதும் உதவினார். தோட்டக்கலை, பூக்கள் தொடர்பாக எந்த சந்தேகம் என்றாலும் ஆலோசனைகள் தந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொள்வேன்’’ என்றவர், மைக்ரோ இரிகேஷன், பாலி கவர், ஆட்டோமெடிக் பெர்டிலேசர் என நவீன தொழிற்நுட்பங்களையே முழுமையாக பயன்படுத்தி ஐந்து ஏக்கரில் ரோஜா மலர்களை உற்பத்தி செய்கிறார்.

‘‘பிப்ரவரி மாதம் தேவை அதிகம் இருப்பதால் டிசம்பர் முதல் வாரத்திலேயே அதற்கான காவாத்து பணிகளான உரமிடுதல், மருந்து தெளித்தல் ஆகியவற்றை ஆரம்பித்து விடுவோம். பிப்ரவரி முதல் வாரத்தில் அறுவடை செய்து மூன்று நாட்களிலே ஏற்றுமதி செய்து விடுவோம். முழுமையாக ரோஜா அறுவடைக்கு வர 48 நாட்கள் ஆகும். ஏற்றுமதி செய்வதற்கு முன் 24 மணி நேரத்திற்கு 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை ‘Pre cooling’ செய்வோம்.

இல்லையென்றால் இரண்டு நாட்களிலேயே வாடி விடும். தண்டு 50 சென்டி மீட்டர் மேல இருப்பது ஏற்றுமதி தரமாகும். வாடிக்கையாளரை சேரும் போதுதான் விரிய வேண்டும் என்பதால் வேர்க்கடலை அளவு வரும் போதே மொட்டின் மேல் கேப் போட்டுவிடுவோம். அதனால் பூ விரியாமல் நேராக வளரும். ஓசூரில் உற்பத்தி ஆகும் ரோஜாக்களுக்கு 8 முதல் 10 நாட்கள் வரை ஆயுள் இருக்கும். ஓசூர் கடல் மட்டத்திலிருந்து 1050 மீட்டரில் இருக்கிறது. இதுதான் ரோஜாக்களுக்கான சரியான நிலப்பகுதி. காலநிலை, செம்மண், நீர் வளம், தேவையான கட்டமைப்பு அனைத்தும் இங்கு ரோஜா மலர்கள் வளர ஏற்றதாக அமைந்துள்ளது. ஊட்டி, பூனே, நாசிக் பகுதிகளில் உற்பத்தி செய்தாலும் தரமான பூக்களுக்கு ஓசூர்தான் டாப்’’ என்கிறார் பால சிவ பிரசாத்.

‘‘ஆரம்ப காலக்கட்டத்தில் எனக்கு மார்க்கெட்டிங், விற்பனை குறித்து அவ்வளவாக அனுபவம் இல்லை. உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தேன். அதில் லாபம் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தேன். 2010ல் கோயம்புத்தூரில் TNAU சார்பாக மலர் கண்காட்சியில் என் ரோஜாக்கள் பங்கு பெற்றன. அதன் மூலம் சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஏற்றுமதியில் நாட்டுக்கு நாடு வித்தியாசம் இருந்தாலும், உலகத்தில் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் ரோஜாக்களுக்கு வரவேற்பை அதிகமாக பார்க்க முடிகிறது.

தண்டின் நீளத்தை பொறுத்தே ரோஜாக்களின் இதழ்களின் அடர்த்தி இருக்கும். இலங்கையில் இலைகள் இல்லாமல் குச்சியுடன் உள்ள ரோஜாக்களை கேட்பார்கள். சிங்கப்பூர், மலேசியா, துபாய்க்கு 60 சென்டி மீட்டர், ஜப்பானுக்கு 30 சென்டி மீட்டர் நீளம் கொண்ட ரோஜாக்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவில் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள 20 பூக்கள் கொண்ட கட்டுகளை சப்ளை செய்கிறோம்.

தண்டின் நீளத்திற்கு ஏற்றவாறு விலையும் மாறுபடும். 50 – 60 சென்டி மீட்டர் நீளம் தண்டுள்ள பூக்களே பிரிமியம் குவாலிட்டி. நாங்க ஆர்கானிக் உரங்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம். அரும்பு, இலை பெரிதாக வளர, தண்டு, பூக்கள் என அனைத்திற்கும் தனித்தனி உரங்கள் கிடைக்கின்றன’’ என்றவர், வண்ண அடிப்படையில் தாஜ்மகால், ஹாட் சாட், வொய்ட் அவலான்ச், ஆரஞ்ச் கார் வேட்டா என 12 விதமான ரோஜாக்களை கமர்சியல் அடிப்படையில் உற்பத்தி செய்து வருகிறார்.

சிறந்த விவசாயிக்கான விருதுகள் பல வாங்கியிருப்பதாக கூறும் பிரசாத், ‘‘நேஷனல் ஹார்டிகல்ச்சர் போர்டு மற்றும் குரோவர்ஸ் ஃபிளார் கவுன்சிலின் ஆப் இந்தியாவில் இயக்குனராகவும் இருக்கிறேன். இந்த அமைப்புகளின் மூலமே பூ விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தவும், வங்கிக் கடன் மற்றும் மானியத் தொகையை அதிகரிக்கவும் இன்சூரன்ஸ் போன்றவற்றை பெற்றுத் தந்து உதவி செய்கிறேன். மலர் விவசாயத்திலும் ஆள் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், உலக சந்தை, பிளாஸ்டிக் பூக்கள் என பல்வேறு சவால்கள் இருக்கின்றன. தரம் மட்டுமே இந்தத் தொழிலில் முதன்மையாக பார்க்கப்படுகிறது’’ என்று கூறும் இவர், தமிழ்நாடு அரசும் மலர் விவசாயத்தை மேலும் ஊக்குவித்தால் மலர் விவசாயம் செய்ய பலர் முன்வருவார்கள் என்கிறார் பால சிவ பிரசாத்.

தொகுப்பு: கலைச்செல்வி

Related Stories: