மதுரை மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தொடர்பாக திமுகவிடம் பேசிய பின்பு தான் முடிவெடுக்க முடியும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடம் இருக்காது.
பாஜவை சேர்ந்தவர்கள் அண்ணாமலை உள்பட, தமிழ்நாட்டில் எங்கே எந்த சம்பவம் நடந்தாலும் அதில் இந்துத்துவா கொள்கையை திணிப்பதற்காக பழியை போடுவதும், மதமாற்றம் செய்ய முயன்றார்கள் என சொல்வதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே பலமாக இருக்கும் திமுக கூட்டணி, இன்னும் பலம் பெறும். இப்போது எங்கள் கூட்டணி மேலும் மேலும் பலம் பெற்றுள்ளது. இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 3 முறை இல்லை, 33 முறை வந்தாலும் இந்தியை திணிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
