- தமிழ்நாட்டு ஆவணக் காப்பகங்கள்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு
- உயர் கல்வித் துறை
- எக்மோர், சென்னை
சென்னை: உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் பழமையான தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 100 வருடங்கள் பழைமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த 1909ம் ஆண்டு “மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்” என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1973ல் “தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி ஆவணக்காப்பகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2009ம் ஆண்டு தனது 100-வது ஆண்டை நிறைவு செய்தது. சுமார் 40 கோடி ஆவணங்கள் கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சியாளர்களின் மிகச்சிறந்த தேடல் களமாக உள்ளது.
தமிழ்நாட்டின் விடுதலை வரலாறு, சமூக நீதி வரலாறு, அரசு நிர்வாக வரலாறு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி கால அரசுத்துறைகளின் காலவாரியான ஆவணங்கள், நில வரைபடங்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவை ஆவணக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நவீன கண்காட்சிக் கூடத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியது குறித்த ஆவணம் உள்ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், பெருநகர சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், உயர் கல்வித்துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் மலர்விழி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விசாகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
