×

நச்னு நாலு கேள்வி; எல்லாவற்றிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு; மக்களுக்கான கூட்டணி திமுக கூட்டணி: ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

1. ராஜ்யசபா தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்க காரணம் என்ன? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் 2 சீட் கூட வரும் தேர்தலில் கிடைக்காது என்பதாலையா?
234 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்கிற நிலையிருக்கின்ற காரணத்தால் இப்போதே தேர்தல் நடத்தினால் இருக்கின்ற 2 சீட்டை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் ராஜ்யசபா தேர்தல் நடத்தப்படுகிறது.

2. தமிழ்நாட்டை எந்த எந்த விதத்தில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது?
தமிழ்மொழிக்கு கூட பணம் கொடுக்கவில்லையே. தமிழ் மொழிக்கு ரூ.120 கோடியும், சமஸ்கிருதத்துக்கு ரூ.4000 கோடியும் கொடுக்கின்றனர். இதுமட்டுமில்லை. வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு, இயற்கை இடர்பாடுகளுக்கு நிதி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு நல்ல திட்டங்களுக்கும் அனுமதி அளிக்காமல் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்ற திட்டங்களுக்கு தடை போன்ற நிலையை உண்டு பண்ணியிருக்கின்றது ஒன்றிய அரசு.

கல்வி நிதி, குடிநீர் நிதி கிடையாது. மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி கிடையாது. மாநிலங்களுக்கு இடையேயான நிதிபகிர்வில் பாரபட்சம். அவர்கள் ஆளும் மாநிலத்திற்கு ஒண்ணு, நம்முடைய மாநிலத்திற்கு ஒண்ணு என்கின்ற நிலையில் இருக்கின்றனர். ஜிஎஸ்டியை பொறுத்தவரை ஒன்றிய அரசு ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறார்கள். பீகாருக்கு ரூ.7.06 பைசாவும், உத்திரபிரதேசத்திற்கு ரூ.2.47ம் கொடுக்கிறார்கள். நம்முடைய மாநிலத்திற்கு வெறும் 29 பைசா தான் கொடுக்கிறார்கள்.

3. ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லையே? தமிழகத்தில் வேளாண் மண்டலம் மற்றும் கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், எண்ணெய் கிணறு திட்டங்களை கொண்டு வந்து ஒன்றிய அரசு வளத்தை அழிப்பது குறித்து? விவசாயிகள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் மூன்று கருப்பு சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை முற்றிலுமாக ஒன்றிய அரசு வஞ்சித்தது, மிகக் கொடுமையானது. மூன்று கருப்பு சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை தாழ்த்துவதுடன், அவர்களை தற்கொலைக்கு தூண்டியது,

துப்பாக்கி சூடு நடத்துகிற அளவிற்கு மோசமான நிலையை உண்டு பண்ணியது ஒன்றிய அரசு. கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து டெல்டா பகுதிகளில் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஏற்கனவே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பைக் கூட முறையாக செயல்படுத்தாத ஒன்றிய அரசு, நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நீரைக் கூட 12 ஆண்டுகளாக முறையாக பெற்றுத்தராத ஒன்றிய அரசு, விவசாயத்தை முற்றிலும் அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர துடித்துக் கொண்டு இருக்கிறது.

4. தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
தமிழ்நாட்டில் நாள்ஒன்றுக்கு 25 கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் கலைஞரின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தமிழ்நாடு முதல்வர் எல்லா திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற அதே நிலையில், நாம் எதையெல்லாம் செய்துள்ளோம் என்கின்ற பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அதோடு 234 தொகுதிகளில் திமுக வெல்லும் என்ற நிலை இருக்கிறது. காலை கதிரவனின் ஒளி எப்படி பிரகாசமாக இருக்குமோ? அதேபோல் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

நேற்று காலையில் கூட விஜயகாந்தால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிகவின் பொதுச்செயலாளர், முதல்வரை சந்தித்து அவர்களுடைய ஆதரவையும் தந்துள்ளனர். அந்த அளவுக்கு பெரிய மகா கூட்டணி என்பதை விட மக்களுக்கான கூட்டணியாக இந்த கூட்டணி உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவு ெசய்கிற மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால் நிச்சயமாக 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இதில் எள்ளவும் ஐயப்படத் தேவையில்லை.

Tags : Nachnu Nalu ,Union government ,Tamil Nadu ,DMK ,A.K.S. Vijayan ,Special Representative ,Tamil Nadu Government ,Delhi ,Rajya Sabha ,National Democratic Alliance ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! ‘முதலமைச்சரின்...