மகாராஷ்டிராவில் உள்ள இடங்களுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதை ஏற்க முடியாது: அமைச்சர் நிதேஷ் ரானே பேச்சு

தானே: திப்பு சுல்தானின் பெயரிடப்பட்ட பொது இடங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அத்தகைய பெயர்களைக் கொண்ட இடங்கள் பாகிஸ்தானில் கட்டப்பட வேண்டும் என்றும் பாஜ அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்தார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவையும் 18ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானையும் ஒப்பிட்டு, மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல் பேசியது சர்ச்சை ஆனது. இந்த கருத்துக்காக மன்னிப்புக் கேட்ட சப்கல், யாருடைய மனதையும் புண்படுத்துவது தன் நோக்கமல்ல என்று தெரிவித்தார். மேலும் பாஜவினர் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை பெரிது படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தானேவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜ அமைச்சர் நிதேஷ் ரானேவிடம் திப்பு சுல்தான் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், ‘எங்கள் இந்து தேசத்தில் இதுபோன்ற பெயர்களை வைப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இது போன்ற பெயர்களை வைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தடுப்போம். திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதற்கு இது இடமல்ல, பாகிஸ்தானிலும் இஸ்லாமாபாத்திலும் தான் அவரின் பெயர் சூட்டப்பட வேண்டும்’ என்றார்.

மேலும் மும்பையில் முன்மொழியப்பட்டதைப் போலவே, 5 ஆண்டுகளுக்குள் தானேயில் ஒரு ‘கொங்கன் பவன்’ கட்டப்படும். வேலைக்காக நகரங்களுக்கு குடிபெயர்ந்த கொங்கன் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இது உதவும். மும்பை முதல் கொங்கன் வரை, அனைத்து பிரதிநிதிகளும் ஆளும் மகாயுதியை கூட்டணியைச் சேர்ந்தவர்கள். கொங்கன் பாஜகவின் கோட்டையாகும். கொங்கன் மக்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மாம்பழம் மற்றும் முந்திரி உள்ளிட்ட கொங்கன்விளைபொருட்களை நகர்ப்புற சந்தைகளில் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

Related Stories: