புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பிஏசிஎல் நிறுவனம் ரூ.48 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த நிர்மல்சிங் பாங்கு மற்றும் பலருக்கு எதிராக 2014ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 2024 ஆகஸ்ட் மாதம் நிர்மல்சிங் பாங்கு மறைந்தார். இருப்பினும் மோசடி பற்றி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. அதன் ஒருபகுதியாக பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 247 அசையா சொத்துக்களை முடக்கும் மிகப்பெரிய உத்தரவை அமலாக்கத்துறை நேற்று பிறப்பித்துள்ளது. பஞ்சாபில் உள்ள எஸ்ஏசி நகர் (மொகாலி), ரூப்நகர் மற்றும் ஜிராக்பூரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் உள்பட 247 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
