சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 1ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதில் கடந்த 5ம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக நாளை மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்.
