சென்னை: கடந்த 5ம் தேதி கேரளாவில் நடந்த கார் விபத்தில் சிக்கி, அதில் பயணித்த அருண் ஆபிரகாம், அவரது மனைவி ஷெரின் ஆன் ஜான், அவர்களது குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் உயிரிழந்தது. இச்சம்பவம் கேரள மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில், அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவை பெற்றோர் எடுத்துள்ளனர்.
அதன்படி அலின் ஷெரின் ஆபிரகாமின் இதய ரத்தக்குழாய், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், கார்னியா ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 5 குழந்தைகள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ‘கேரளாவின் இளம் உடல் உறுப்பு நன்கொடையாளர்’ என்ற பெருமையை அலின் ஷெரின் ஆபிரகாம் பெற்றுள்ளார்.
பெற்றோரின் இந்த முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகரும், மநீம கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘அருண் ஆபிரகாம், ஷெரின் ஆன் ஜான் ஆகியோருக்கு சல்யூட். நமது குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம், தனது தாயின் கருவுக்குள் பல மாதங்கள் வாழ்ந்தார்.
10 மாதங்கள் தனது பெற்றோரின் எல்லையற்ற அன்பால் அரவணைக்கப்பட்டார். இப்போது அவள், மற்ற 5 குழந்தைகள் சிறப்பாக வாழ உதவுவுகிறாள். மனநிலையாலும், இதயத்தாலும் நீங்கள் அன்பான பெற்றோர்கள். எப்போதும் அப்படியே இருப்பீர்கள். வாழ்க்கையின் மூலம் உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்கவும், நீங்கள் இருவரும் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
