தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: யார் யாரால் வெற்றி பெற்றோம் என்று கூட்டணியில் கணக்கு பார்க்க முடியாது. இந்த கூட்டணி என்பது எல்லோரும் ஒரு முகமாக கட்டுக்கோப்பாக ஒரு பொது எதிரி பாஜ, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டால்தான் வெற்றியை பெற முடியும். இதில் என்னால்தான் நீங்க ஜெயிச்சீங்க… உன்னால்தான் நாங்கள் ஜெயிச்சோம். நீங்க 30 தொகுதிகள் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க நாங்கதான் காரணம். இப்படி எல்லாம் பதிவுகளை போடுவதால் பிரச்னை தீராது. ஆக, மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் தேவை. எல்லாரும் ஓரணியில் நின்று வகுப்புவாத பாஜவுக்கு எதிராக, கொள்கை இல்லாத தவெகவுக்கு எதிராக நாம் களம் கண்டு ஆக வேண்டும்.
கொள்கையே இல்லாத ஒரு கட்சியை விஜய் நடத்திட்டு இருக்காரு.. அவருக்கு என்ன கொள்கை என்று எனக்கு தெரியவில்லை. திமுக எதிர்ப்பு மட்டுமே ஒரு கொள்கையாக இருக்க முடியாது. தேசிய நலனில் அவருக்கு அக்கறை இருக்கா? வகுப்புவாத மோடியை எதிர்த்து ஏதாவது கூறுகிறாரா? கரூர் சம்பவத்துக்கு பிறகு பாஜவை எதிர்த்து ஒரு வார்த்தை கூறாதவரோடு, காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க எந்த வாய்ப்பும் இல்லை. 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கிறேன். உள்ளும், புறமும் அறிந்தவன் என்பதை வைத்து சொல்கிறேன். தவெகவுடன் காங்கிரஸ் கட்சி சேர எந்த வாய்ப்பும் இல்லை. இப்படி பேசுவதால் திமுக கைக்கூலி என்று சொல்வார்கள். நான் பாஜ, ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியாக இல்லாமல் திமுகவின் கைக்கூலியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக செல்வப்பெருந்தகை கையெழுத்திட்ட மறுநாள், பாஜவின் கைக்கூலிகள் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அல்லது அவர்களாகவே வெளியேறுவார்கள்.
தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்க பாஜ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஒன்னு, திமுககிட்ட காங்கிரசோடு கூட்டணி வைக்காதீங்க… உங்களுக்கு நாங்க எந்த பிரச்னையும் பண்ண மாட்டோம்… எந்த தொல்லையும் தர மாட்டோம்… அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்று எந்த பிரச்னையும் இருக்காது என்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இது மாதிரி பாஜ பேசுவதாக நான் கேள்விப்பட்டேன். அதேபோல், காங்கிரசுடன் நீங்கள் சேர்க்க கூடாது. சேர்ந்தீர்கள் என்றால் கரூர் சம்பவத்தில் எப்ஐஆர் போட்டு விடுவோம் என்று தவெகவுக்கு மிரட்டல் உள்ளது. அவருக்கு பல பிரச்னைகள் உள்ளது. ஜனநாயகன் என்ற படத்தை தணிக்கை துறை தடை செய்து உள்ளது. ரூ.250 கோடி நஷ்டம் வரும் என்று சொல்பவர் இதை எதிர்த்து கூட கருத்து சொல்ல மாட்றாரு… இப்படி அவரை மிரட்டுறாங்க… இந்த நிலையில், மிகுந்த துணிச்சலுடன் காங்கிரசுடன் கூட்டணி வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார். இந்த கூட்டணி தமிழ்நாடு நலன் சார்ந்து அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னால், காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவன் கடுமையாக உழைத்து, கொள்கை சார்ந்து காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு, அதன்மூலம் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்து, 25ல் இருந்து 30 சதவீத வாக்குகள் பெற்று 5 ஆண்டுகள் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உழைக்குமேயானால். காங்கிரசின் நல்ல கொள்கைகளை மக்களிடம் சொல்லி ஒரு தலைவன் உருவானால், என்னை போல் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்தால் காமராஜ் ஆட்சி என்பது மெய்ப்படும். நம் தலைமையில் ஆட்சி வர வேண்டும். காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் ஒரு லீடர் வேணும். அவருக்கு அகில இந்திய தலைமை சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர் புள்ளி விவரங்களுடன் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றால் 40 கேமரா வர வேண்டும். அப்படி செய்தால் இன்றைக்கு இருக்க கூடிய ஊடக வெளிச்சத்தில் 6 மாதத்தில் காங்கிரசை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே மாதிரி பொட்டன்ஷியல் லீடர் தேவை.
திமுக-காங்கிரஸ் இடையே எவ்வளவு சீட் என்பதில்தான் பிரச்னை உள்ளது. அதை திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் பேசி முடிவு எடுப்பார்கள். நடுவில் கனிமொழி இருக்கிறார்.
காங்கிரஸ் ஐவர் குழு இருக்கிறது. எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்பார்கள். தேர்தலில் நின்னு போட்டியிடுகிற, வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கிற அத்தனை பேரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரும்புகின்றனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாதவர்கள் தவெகவுடன் சேர விரும்புகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி செல்ல வேண்டும். தவெகவுடன் சேர்ந்தால் 234 தொகுதிகளில் கூட வாய்ப்பு இல்லை. 234 தொகுதிகளிலும் தோல்வி அடைய விஜய் கட்சி நடத்துறாரு. இதுவரைக்கும் பலம் இருக்கு, தவெகவுக்கு 18% ஓட்டு இருக்குனு பிரவீன் சக்கரவர்த்தி சொல்றாரு…தவெகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கு ஆராய்ச்சி பண்ணல. இவரு காங்கிரஸ் கட்சியில் இருக்காரு… இவரு யார் இத சொல்றதுக்கு… சரி, இதுவரைக்கும் ஒரு கட்சியாவது தவெகவுடன் கூட்டணி வச்சதா? ஏன் வைக்கல… வெற்றி வாய்ப்பு கிடையாது.
கூட்டம் வரும். விஜய்க்கு அடுத்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன்னு சொன்னா… இவங்க ஆட்சி அமைத்து இவர்கள்தான் அமைச்சர்களா? மக்கள் ஏளனம் செய்வார்கள். வெற்றி வாய்ப்புக்கான அறிகுறியே தவெகவில் கிடையாது. விஜய் வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள். கலைவார்கள். ஆனால், தேர்தல் களத்தில் எந்த அளவுக்கு அவர்கள் வலிமையை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் எம்ஜிஆர் வேறு, விஜயகாந்த் வேறு, ஜெயலலிதா வேறு, விஜய் வேறு. விஜய் யாரையும் சந்திக்க மாட்டார், பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டாரு என்ற நிலையில் உள்ளவருக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும். இவ்வாறு தெரிவித்தார்.
