திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணைச் செயலாளர் ஆகியோர் எதிர்எதிர் துருவம் போன்று செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நடிகரை நம்பி அரசியல் கட்சிக்கு வந்த அடிமட்ட தொண்டர்கள் யாரிடம் செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒரு தரப்பு நடத்தும் ஆலோசனை கூட்டத்தைப் மற்றொரு தரப்பு புறக்கணிப்பதும், போஸ்டர் முதல் பொது நிகழ்ச்சிகள் வரை தங்களது ஆதரவாளர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவதுமாக தனித்தனியாய் அரசியல் செய்து வருகின்றனர்.
இதுபற்றி மாநில தலைமைக்கு புகார்கள் அனுப்பினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். சமீபத்தில்கூட அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு தனித்தனியாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சி தலைவரை சந்திப்பதும், கொள்கைகள் என்னவென்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தொண்டர்களுக்கு பெரும் கவலையாய் இருக்கும் நேரத்தில் மாவட்டத்திற்குள்ளாக நிர்வாகிகளும் ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்தனியாக பணியாற்றுகின்றனர். இந்த கோஷ்டிபூசல் காரணமாக கட்சியின் செயல்பாடு முடங்கி கிடப்பதாக கீழ் மட்ட நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
