சென்னை: கூட்டணியை சிதைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் மாணிக்கம் தாகூர் மீது புகார் செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அவசரமாக பெங்களூரு புறப்பட்டு செல்கின்றனர். நாளை மாவட்டச் செயலாளர் கூட்டத்தையும் கூட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக, கொமதேக, தவாக, தமிழர் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உள்ள மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, தொழில் நுட்பப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
நாடு முழுவதும் 24 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக, தமிழகத்திலும் அதிமுகவுக்கு இணையாக செல்வாக்கான கட்சியாக உள்ளது. அக்கட்சியில் சக்தி மிக்க தலைவராக உள்ள அமித்ஷா, கூட்டணியில் பங்கு குறித்து பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். ஆனால் நாடு முழுவதும் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸ், தமிழகத்தில் தேய்பிறையாகவே உள்ளது. அக்கட்சிக்கு முன்பு போல தொண்டர்கள் பலம் குறைந்து விட்டது. ஆனாலும், ஆட்சியில் பங்கு, அமைச்சர் பதவி வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் நேரடியாக புகார் செய்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருந்த தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் இது குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை டெல்லியில் ராகுல்காந்தி கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழகத்தில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பதை தலைவர்கள் யோசித்து பேச வேண்டும். பழைய நினைப்பில் நாம் இப்போது இருக்கக் கூடாது, பேசவும் கூடாது என்று கூறினார்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பேச தொடங்கியபோது அவர்களை பேசக்கூடாது என்று ராகுல்காந்தி எச்சரித்து அனுப்பி விட்டார். இந்தநிலையில் சென்னையில் கடந்த இரு நாட்களாக தங்கியுள்ள மாணிக்கம் தாகூர், மீண்டும் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளார். கூட்டணித் தலைவர்களிடம் பேச வேண்டிய கருத்துக்களை, டிவி விவாதங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் வேண்டும் என்றே மாணிக்கம் தாகூர் பேசி வருகிறார்.
இது காங்கிரசில் உள்ள தமிழக நிர்வாகிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேர்தலை சந்திக்காதவர்கள்தான் இந்த பிரச்னையை எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்னையை மாணிக்கம் தாகூர், எம்பி தேர்தலின்போது எழுப்ப வேண்டியதுதானே. தேர்தலில் திமுக தயவு வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் என்றவுடன் தற்போது பிரச்னையை அவர் உருவாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து புகார் செய்ய காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து ராகுலிடம் பேசி பயன் இல்லை.
இதனால், நேரடியாக காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர் மூலம் ராகுலிடம் பேசி, இதுபோன்று தேவையில்லாமல் பேசி வரும் நிர்வாகிகள், எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் 25 பேர் பெங்களூர் செல்கின்றனர். அங்கு கார்கேவை சந்தித்து புகார் செய்கின்றனர்.
கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களின் தன்னிச்சையான போக்கு நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அதற்காக மேலிடத்தில் புகார் செய்ய முடிவு செய்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் புதிய மோதலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் நாளை காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
