காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தேர்தல் நேரத்தில் சர்ச்சையாக பேசுவது ஏன்?.. செல்வபெருந்தகை கடும் கண்டனம்

 

சென்னை: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தேர்தல் நேரத்தில் சர்ச்சையாக பேசுவது ஏன் என்று செல்வபெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை அளித்த பேட்டி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் ஆலோசிக்க உள்ளோம். மதுரையில் நடைபெற்ற கூட்டம் குறித்து எனக்கு தெரியாது. எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை என்ன வழிகாட்டுகிறதோ? அந்த வழிகாட்டுதலின்படி இயங்குபவன் தான் நான்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எங்களுக்கு என்ன சொன்னது. யாரும் பொதுவெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது. கிளியராக ராகுல் காந்தி, மல்லிகார்ஜீன கார்கே, கே.சி.வேணுகோபால் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் 3 பேரையும் விட வேறு யாரேனும் பெரியவர்கள் இருக்கிறார்களா? என்பது எனக்கு தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலை மதிப்பவன் நான். கட்சி என்ன சொல்கிறதோ? அந்த வழிகாட்டுதலின்படி அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அதற்கு மேல் யாரும் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றால் எனக்கு தெரியவில்லை. பேச்சுவார்த்தை நடத்த 5 நபர் கமிட்டி கிரிஸ் சோடங்கர் தலைமையில் அமைத்து இருக்கிறார்கள்.

அந்த கமிட்டிபேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. பொதுவெளியில் யாரும் பேச கூடாது. அதை எங்கள் தலைமை பேசும். என்னை பொறுத்தவரைக்கும் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது. மேலிடமும் அதை தான் சொல்லியிருக்கிறது. தமிழக காங்கிரசும் அதை தான் சொல்லியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் இவ்வளவு காலம் பேசாமல், தேர்தல் நடக்கும் நேரத்தில் ஏன் பேச வேண்டும். பேசுவதை தவிர்க்க வேண்டும். அறைக்குள் பேசுவதை பொதுவெளியில் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: