சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எங்கள் ஆட்சியில் என்ன தவறு என்று சுட்டிக்காட்டுங்கள். அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதிமுக பாஜவின் அடிமை. எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கினார் என கூறுவதை தவிர்க்க வேண்டும்.
தே.ஜ. கூட்டணி என்பது வலுவான கூட்டணி. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நேரில் வந்து கூட்டணி கட்சி தலைவருடன் மேடையில் தோன்றி சிறப்பாக பிரசாரத்தை துவக்கி வைத்தார். இதுவரை எந்த கட்சியும் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரசாரம் செய்ததில்லை. அதிமுக ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்தோம் என்று சொல்லி சந்திக்கிறோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரி, 7 சட்டக் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
4 பொறியியல் கல்லூரி, 5 கால்நடை மருத்துவர் ஆராய்ச்சி கழகம், கால்நடை பூங்கா என பல கல்லூரிகளை திறந்து பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தினோம். ஒன்றிய அரசு கூறிய 2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019 லேயே அடைந்தோம் சாதனை படைத்தோம்.
விஜய், செங்கோட்டையன் பற்றி நோ கமண்ட்…
சேலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தவெக பிரசார கூட்டத்தில் அதிமுகவை விஜய் கடுமையாக சாடிய நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் அவரை எடப்பாடி கடுமையாக தாக்கி பேசுவார் என எதிர்பார்த்து தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் வாயே திறக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தது. பவானிசாகர் தொகுதியும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அவர் தவெக இணைந்ததால் அவரை பற்றியும் தாக்கி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் எடப்பாடி வாய் திறக்கவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
