பாஜ கூட்டணி ஒரு ஓட்டை பானை; காங். கப்பல் ஸ்டார்ட்டாக நேரமாகும்

மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் நேற்று தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது: ராகுல் காந்தியை பேச விடாமல் செய்ததற்காக, மோடி அரசை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் 8 பேர். இதில் 7 பேர் காங்கிரஸ், ஒருவர் கம்யூனிஸ்ட். பாஜவை எதிர்த்து நிற்கும் தைரியம் காங்கிரசுக்கு மட்டும் தான் உள்ளது. அன்போடும் மரியாதையோடும் எங்களை நடத்தினால் நாங்களும் அப்படி இருப்போம். எங்களை கீழ்மைபடுத்தி பேச நினைத்தவர்களுக்கு அதேபோல் பதில் கொடுப்போம். காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியும், கார்கேயும் இந்தியா கூட்டணியை எடுத்துச் செல்ல போராடுகிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜவை எதிர்த்து அவர்கள் போராட்டம் தொடர்கிறது.

தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதைப்போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சி கப்பலை போன்ற மிகப்பெரிய கட்சி. ஆரம்பிப்பதற்கும், திரும்புவதற்கும் நேரம் எடுக்கும். ராகுல் காந்திக்கு திமுக கொடுக்கின்ற உறவை, காங்கிரசின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் திமுக கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாம் உழைப்போம். பாஜவை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும். பாஜ கூட்டணி ஒரு ஓட்டைப்பானை. அதில் சேர்ந்த அதிமுக, பாமக, அமமுக காலியாகி விட்டன. தண்ணீரெல்லாம் வெளியேறி இது வெறும் பானையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாணிக்கம் தாகூர் எம்பி, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நாங்கள் மற்ற கட்சியைப் போல இடப்புறம் இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பவில்லை. நாங்கள் தேசிய கட்சி. எங்களுக்கு நெறிமுறை உள்ளது. திமுக உடனான உறவுடன் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். பேசுவதற்காக குழு அமைத்து 70 நாள் ஆகிவிட்டது. காத்திருக்கிறோம். வருகிற 22ம் தேதி குழு அமைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Related Stories: