ஊழல் வழக்கில் சிறையிலிருந்து வந்த சசிகலா கடந்த தேர்தல்களில் அமைதி காத்து வந்தார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் எனறு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தன்னை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்துக்கொள்வார் என்ற சசிகலா எதிர்பார்ப்பில் இருந்தார். இதற்காக பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தியதாக கூறப்படுகிறது. சசிகலா சார்ந்த முக்குலத்தோர் வாக்கு வங்கிக்காக அவரை கட்சியில் இணைக்கும் முயற்சியில் பாஜ மேலிடமும் முயற்சித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறார்.
கடந்த அக். 30ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்ற சசிகலாவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அடுத்து செங்கோட்டையன் தவெகவில் ஐக்கியமானார். டிடிவி.தினகரன் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் உள்ள என்டிஏ கூட்டணியில் இணைந்தார். செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றது, எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி கைகோர்த்தது சசிகலாவிற்கு பிடிக்காமல் கோபத்தின் உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரனுக்கு மட்டுமின்றி, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மூலகாரணமாக இருந்த பாஜவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற மனநிலையில் சசிகலா இருப்பதாக தெரிகிறது.
இந்த தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னை போயஸ் காடனில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சசிகலா சந்தித்து வந்தார். இதில் குறிப்பாக தென்மாவட்டம், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அமமுக, அதிமுகவினர், முக்குலத்தோர் அமைப்பினரை சந்தித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு சென்றடையவில்லை. இதனால் சுமார் 45 தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனை கருத்தில் கொண்டே தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார் சசிகலா. இதற்காக வருகிற பிப். 24ம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் வழிபாடு செய்து விட்டு அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக்கூட்டம் நடத்த சசிகலா தீர்மானித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக பசும்பொன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், சமீபத்தில் அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருமங்கலம் ஜீவிதா நாச்சியார் உள்ளிட்ட அதிமுக, அமமுக முன்னாள் நிர்வாகிகள் பலர் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் சசிகலா சார்பில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். தொடந்து பசும்பொன் அருகே கமுதி, மதுரை சாலையோரம் உள்ள கோட்டைமேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் பொதுக்கூட்ட மேடைக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடந்தது. வரும் 24ம் தேதி நடக்கின்ற இந்த கூட்டரங்கில் சசிகலா புதுக்கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பார். மேலும், தனது அரசியல் பயணத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பசும்பொன்னில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், புதுக்கட்சி என சசிகலாவின் ஆதரவாளர்கள் முகூர்த்தக்கால் நட்ட சம்பவம் அதிமுக, அமமுக, பாஜ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
