சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அறநிலையத்துறை இவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என காட்டியவர் சேகர்பாபு. தான் செயல்பாபு என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருப்பவர் அமைச்சர் சேகர்பாபு. தி.மு.க. ஆட்சியில் 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.
19 திருக்கோவில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் கலந்து கொண்ட முருகன் மாநாட்டை நடத்தி காட்டினோம். உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். பசிப்பிணியை போக்கும் திட்டங்கள் தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
வள்ளலார் தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர். வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை. அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் அமைக்கப்படும். வள்ளலார் சன்மார்க்க பயிற்சி பள்ளி அரசு சார்பில் அமைக்கப்படும். 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அமைக்கப்படும். வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும். தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார்
