கொழும்பில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்; உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய போட்டி: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

கொழும்பு: 20 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் ஏ பிரிவில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன. உலகம் முழுவதும் இந்த போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் உள்ளது. நடப்பு சாம்பியனும் நம்பர் 1 அணியுமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் முதல் 2 போட்டியிலும் வென்றுள்ள நிலையில் இன்று வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக நுழைய போராடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் நேற்று அளித்த பேட்டி: “பாகிஸ்தான் இங்கு (கொழும்பு) தொடர்ச்சியாக ஆடி வருவதால் சிறிய சாதகம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் நாங்கள் மற்ற அணியின் மீது கவனம் செலுத்துவதை விட, எங்களது ஆட்டத்தில் என்ன செய்யவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த விரும்புகிறோம். இலங்கை எங்கள் அண்டை நாடு தான். இங்கும் ஆடுகளம் இந்தியாவைவிட கொஞ்சம் தான் வித்தியாசமாக இருக்கும். இங்கு நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றுள்ளோம். இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் இனி இருதரப்பு தொடரில் விளையாடுமா என்று எனக்கு தெரியாது. அது குறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும்.

இது உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய போட்டி. அதுவும், உலககோப்பை போன்ற பெரிய தொடரில் மோதுவது எப்போதுமே எதிர்பார்ப்பை அதிகரிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடி வருகிறோம்.
மழை பெய்யுமா? பெய்யாதா என தெரியவில்லை. அது எங்கள் கையில் இல்லை. இங்கு நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம். அபிஷேக் இன்று நிச்சயம் விளையாடுவார். பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக், ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளர். அதே நேரத்தில், நாம் சரணடைய முடியாது. இதேபோன்ற பந்துவீச்சு கொண்ட பவுலர்களுக்கு எதிராக நாங்கள் பயிற்சி செய்துள்ளோம்’’ என்றார்.

வழிவிடும் வருணபகவான்…
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதால் இன்று கொழும்பில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அப்படி பெய்தாலும் பெரிய அளவில் இருக்காது. மழைவிட்ட 20 நிமிடத்தில் போட்டிகளை மீண்டும் தொடங்கும் வகையில் வடிகால் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருப்பினும் இலங்கையின் வானிலையை மிகவும் துல்லியமாக கணிக்க முடியாது. அவ்வப்போது மாற்றம் நிகழும் என்பதால் போட்டிக்கு இடையூறு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அபிஷேக் பேட்ஸ்மேனே கிடையாதாம்;
பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கூறியிருப்பதாவது: அபிஷேக் சர்மா பேட்டை கண்டபடி சுழற்றுவார். அதுதான் அவருக்குத் தெரியும். அப்படி தான், நான் அவரை பார்க்கிறேன். ஒரு வீரர் பந்தை சரியான லைன் மற்றும் லென்த்தில் விளையாட தெரியாமல், அந்த பந்தை சரியான முறையில் தற்காத்து விளையாடத் தெரியாத வீரரை நாம் எப்படி உண்மையான பேட்ஸ்மேன் என்று அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இன்று சஸ்பென்சை உடைக்கிறேன்!
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா என சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நேரம் இருக்கிறது கொஞ்சம் பொறுத்திருங்கள். அதில் ஏன் இவ்வளவு அழுத்தம்?, நாங்கள் இங்கு கிரிக்கெட் ஆட வந்துள்ளோம். சிறந்த கிரிக்கெட் ஆட உள்ளோம். அது குறித்து நாளை (இன்று) நாங்கள் முடிவு செய்வோம். காத்திருங்கள். நாளை அந்த சஸ்பென்ஸை உடைக்கிறேன். இப்போது ஆட்டம்தான் முக்கியம்” என்றார்.

Related Stories: