10வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பரம எதிரி பாகிஸ்தானுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் அவர் 37 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும், ஓரளவுக்கு ரன்கள் எடுத்தனர். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா, முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி அடிக்க முயன்று கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
இறுதியில் சிவம் துபே சில பவுண்ரிகளை அடிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18 ஓவர் முடிவில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
