மகா சிவராத்திரி விழாவையொட்டி விடிய, விடிய தரிசனத்துக்கு ஏற்பாடு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு 11.45 மணிக்கு முதல் கால பூஜையும் 12.45 மணிக்கு 2ம் கால பூஜையும் அதிகாலை 1.45 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் 2.45 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடத்தப்படுகிறது. அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள மற்ற சிவ தலங்களான இன்மையிலும் நன்மை தருவார் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், சிம்மக்கல் சொக்கநாதர், தெற்கு வாசல் தென்திருவாலவாய சுவாமி, செல்லூர் திருவாப்புடையார், திருவாதவூர் திருமுறைநாதர், ஆமூர் ஐம்பொழில் ஈஸ்வரர், சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், மன்னாடிமங்கலம் மீனாட்சி – சுந்தரேசுவரர் உள்பட பல்வேறு கோயில்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழாவில் நேற்று மாலை, சுவாமி – பர்வதவர்த்தனி அம்பாள் முத்தங்கி சேவையில் வீதியுலா வந்தனர்.

விழாவின் எட்டாம் திருநாளான இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணியளவில் நடராஜர் வீதியுலா வந்தார். தொடர்ந்து கோயில் மண்டபத்தில் பட்டயம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் நாயகர் வாசலில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி – அம்பாள் வெள்ளி ரத புறப்பாடு நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு கோயில் நடை இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டு சுவாமி – அம்பாளுக்கு விடியும் வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நாளை ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுவாமி அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories: