திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின். இவர்களது ஒரே பெண் குழந்தை ஆலின். 10 மாதமான இந்தக் குழந்தையுடன் இவர்கள் கடந்த 5ம் தேதி கோட்டயம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது வேறொரு காருடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த குழந்தை ஆலினுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அருண் ஆபிரகாமும், ஷெரினும் மனம் தளராமல் ஆலினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் இரவு கொச்சி தனியார் மருத்துவமனையில் வைத்து ஆலினின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உறுப்புகள் அகற்றப்பட்டன.
சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஸ்ரேயா என்ற 10 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள 6 மாத குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த இரு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்ததாகவும், இருவரும் உடல்நலம் தேறி வருவதாகவும் டாக்டர்கள் கூறினர். இதய வால்வுகள் திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவமனையிலும், கண் படலங்கள் கொச்சி தனியார் மருத்துவமனையிலும் உள்ளன. இதற்கிடையே உடல் உறுப்புகளை தானம் செய்த ஆலினின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
