புதுடெல்லி: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டத்தின் படி நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேசியக் கல்விக் கொள்கை 2020 பரிந்துரைகளின்படி பள்ளி பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு (2026-27) முதல் 6-ம் வகுப்பில் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படும்.
ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகளையாவது கற்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக, 2031-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மூன்று மொழிகளும் கட்டாயப் பாடங்களாக இருக்கும். தற்போது மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே கற்கின்றனர். மொழிகளை பொறுத்தவரை டோக்ரி, மைதிலி, கொங்கணி, சந்தாலி ஆகிய மொழிகளையும் சிபிஎஸ்இ இணைத்துள்ளது.
ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதப்படுவதால், ஆங்கிலத்துடன் சேர்த்து மற்றொரு வெளிநாட்டு மொழியைத் தேர்ந்தெடுப்பதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் தொழிற்கல்வி, கலைக்கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவற்றை கட்டாயமாக்கியுள்ளது. நவீன காலத் தேவைகளான கம்ப்யூட்டேஷனல் திங்கிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கட்டாயமாக்கப்படுகின்றன. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இனி இரண்டு நிலைகளில் கற்பிக்கப்படும். இந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு இது அமலாகிறது.
