மும்பை: மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி தீட்சித் சோலங்கி(25)கப்பலில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் ஓமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் கப்பல் மீது ஈரான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலில் இன்ஜின் அறையில் இருந்த தீட்சித் சோலங்கி உயிரிழந்தார். சோலங்கியின் உடல் இன்னும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில், சோலங்கியின் உடலை மீட்டு விரைவில் தங்களிடம் ஒப்படைக்க கோரி தீட்சித்தின் தந்தை அம்ருத்லால் மற்றும் சகோதரி மிட்டாலி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும், இன்னும் அவரது உடலை பெறவில்லை.கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்திற்குப் பல மின்னஞ்சல்களை எழுதியும், தெளிவான பதில்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் இருந்து தெளிவான பதில் பெற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
