மைசூரு: மைசூரு மெர்கன்டைல் நிறுவனம் போலீசில் அளித்த புகாரில், ‘இன்போசிஸின் பிராந்திய சிஎஸ்ஆர் தலைவர் என்று தன்னை ககன் என்பவர் அறிமுகப்படுத்தி கொண்டார். அவர் அமைப்பின் உயரதிகாரிகளான நிலாத்ரி பிரசாத் மிஸ்ரா மற்றும் ஹர்ஷ் ஜே ஆகியோரிடம் நேரடியாக அறிக்கை கொடுக்கிறேன் என நம்ப வைத்தார். பின்னர், ஹெக்குஞ்சே ராஜீவ் ஷெட்டி அறக்கட்டளைக்கு பல கோடி ரூபாய் நன்கொடை கொடுப்பதாக கூறினார்.
இதற்காக மங்களூரு மற்றும் உடுப்பி பகுதிகளுக்கு, போலி சரிபார்ப்பு குழுவை அனுப்பினார்.
அறக்கட்டளையின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக மதிப்பாய்வு செய்வதாக குழு நாடகம் நடத்தியது. பின்னர், நூற்றுக்கணக்கான கோடி மானியங்களை விடுவிக்கும் முன், வைப்பு தொகையாக ரூ.6.3 கோடியை பல தவணைகளாக பெற்றுக்கொண்டார். பின்னர், அக்டோபரில் இன்போசிஸ் மூத்த துணை தலைவர் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினார். அதில், கர்நாடகா முழுவதும் வீட்டு வசதி திட்டங்களுக்கு 179 கோடி ரூபாய்.
மற்றும் சுகாதார மையங்களுக்கு ரூ.178 கோடி மானியம் வழங்குவதாக அதில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், உரிய நேரத்தில் பணம் வராததாலும், ககனை தொடர்பு கொள்ள முடியாததாலும் விசாரித்தபோது, ககன் இன்போசிஸ் அதிகாரி போல் நடித்து மோசடி செய்தது தெரியவந்தது.
ககன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் துறையின் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
