ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கத்திற்குப் பிறகு வங்கதேசம் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

 

டாக்கா: வங்கதேச தேர்தல் 2026; ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கத்திற்குப் பிறகு வங்கதேசம் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி கவிழ்ந்தபின், முதல் முறையாக இன்று பொதுத்தேர்தல் தொடங்கியது. வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து, அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது.

இந்நிலையில், மாணவர்கள் எழுச்சிக்குப் பிறகு முதல் முறையாக இன்று வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேசம் தேசியவாத கட்சி (பிஎன்பி) கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், இக்கட்சி 11 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய ஜமாத் இ இஸ்லாமி கட்சி போட்டியிடுகிறது. கடந்த டிசம்பரில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருந்த நிலையில், ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு சமீபத்தில்தான் நாடு திரும்பினார்.

எனவே, பிஎன்பி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் புதிய பிரதமர் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன. வங்கதேசத்தின் 17 கோடி மக்கள் தொகையில் 12.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலை வெளிப்படையாக நியாயமாக நடத்துவதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 43,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 50 சதவீதம் சுமார் 24,000 மையங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Related Stories: