பிப்.25க்குள் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் 10 முதல்வர் படைப்பகங்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

 

சென்னை: திருக்கரங்களால் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் 10 முதல்வர் படைப்பகங்கள் இம்மாதம் 25-ம் தேதிக்குள் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.2.2026) தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, அசோக் நகர், 11வது அவென்யூவில் உள்ள முழுநேர நூலகம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு முழுநேர நூலகத்தை சிஎம்டிஏ சார்பில் “முதல்வர் படைப்பகங்களாக” மேம்படுத்தப்பட்டு வரும் முன்னேற்றப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூட்டரங்கில் சேகர்பாபு தலைமையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிவுற்றப் பணிகளை திறப்பு விழா முன்னேற்பாடு குறித்தும், நடைபெற்றுவரும் பணிகளை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும், அமைச்சர் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, பெரம்பூரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் முரசொலி மாறன் பூங்காவின் முன்னேற்றப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 25 முதல்வர் படைப்பகங்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் திருக்கரங்களால் 3 முதல்வர் படைப்பகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிக அளவில் முதல்வர் படைப்பகங்களை பயன்படுத்தியும், பயனடைந்தும் வருகின்றனர். சென்னை, அசோக் நகரில் ரூபாய் 15 கோடி செலவில் 15,118 சதுர அடி கட்டடப் பரப்பளவில் பிரமாண்டமான முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு, இம்மாதம் 25-ம் தேதிக்குள் திறக்கப்படும். அதேபோல் சென்னை, அண்ணாநகரிலும் ரூபாய் 18 கோடி செலவில் 25,784 சதுர அடி கட்டடப் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமான ஒரு முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் வருகின்ற 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். என்று கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கருணாநிதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர்/முதன்மைச் செயலாளர் செயலர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கூ.பி.ஜெயின், கண்காணிப்புப் பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, தம்பிரான், சரவணன், மாவட்ட நூலக அலுவலர் மு.கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: