ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை; வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தத் தற்காலிக வர்த்தக மோதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்த கூடுதல் வரியை அமெரிக்கா நீக்கியுள்ளது. மேலும், இந்தியப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்து உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியச் சந்தை அமெரிக்கத் தயாரிப்புகளுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், விமானங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் என 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கேற்ப அமெரிக்காவின் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கவும், தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: