கனடா: கனடாவில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் என்ற சிறிய நகரில் சுமார் 2,400 பேர் வசித்து வருகின்றனர். அமைதியான பகுதியாக கருதப்படும் இங்கு, இதற்கு முன் இதுபோன்ற கொடூரமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதில்லை. இந்நிலையில் நேற்று மர்ம நபர் ஒருவர் முதலில் ஒரு மேல்நிலைப் பள்ளிக்குள்ளும், பின்னர் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள்ளும் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கோரத் தாக்குதலில் பள்ளி வளாகத்திற்குள் 6 பேரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், அருகிலுள்ள ஒரு வீட்டில் 2 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ெகாலையாளி உட்பட மொத்தம் 10 பேர் பலியான நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டு, மக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். சுமார் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
