ரஷ்யாவில் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து: தீவிரவாத கும்பல் குறித்து விசாரணை

உஃபா: ரஷ்யாவில் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இந்திய மாணவர்கள் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் பாஷ்கொர்டோஸ்தான் குடியரசு தலைநகர் உஃபாவில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தாக்குதலை தடுக்க முயன்ற 2 போலீசார் உட்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்த நிலையில், விடுதி முழுவதும் ரத்தக் கறையாகக் காணப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவன் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த இந்திய மாணவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் நடத்திய சிறுவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதால் அவனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விபரீத சம்பவம் குறித்து ரஷ்யாவிற்கான இந்திய தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணி குறித்து ரஷ்யாவின் உயர்மட்ட புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: