துபாய்: ஈரானில் சீர்திருத்தவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் தற்போது நாணய மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியற்றை கண்டித்து அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் 18ம் தேதி முதல் பொதுமக்களும், வியாபாரிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் அரசுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு எடுத்த நடவடிக்கையால் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். 27,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு துணை நிற்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
இந்த சூழலில் ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான முதல்கட்ட மறைமுக பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.6) மஸ்கட் தலைநகர் ஓமனில் நடைபெற்றது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் பற்றி ஈரான் வௌியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது. யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் சீர்திருத்தவாதிகள் வௌியிட்ட ஒரு அறிக்கையில், “ஈரானில் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பதவி விலக வேண்டும். நாட்டை மேற்பார்வையிட இடைநிலை ஆளும் குழுவை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஈரானில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நர்கஸ் முகமதி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
