‘மனித பார்பி’ என்று அழைக்கப்பட்ட மாடல் அழகியின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு: காதலன் வீட்டில் கொலை செய்யப்பட்டாரா?

சாவ் பாலோ: பிரேசில் நாட்டில் ‘மனித பார்பி’ என்று அழைக்கப்பட்ட மாடல் அழகியின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள பிரபலம் பார்பரா ஜன்காவ்ஸ்கி மார்க்வெஸ், தனது தோற்றத்தை பொம்மை போல மாற்றுவதற்காக சுமார் 58,00ம் டாலர் செலவில் 27ம் முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டு ‘மனித பார்பி’ (பொம்மை அழகி) என்று உலகளவில் புகழ்பெற்றார். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, ரெனடோ காம்போஸ் பிண்டோ டி விட்டோ (51) காதலனின் வீட்டில் அவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறி உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரது இடது கண் மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் இருந்ததால், இது இயற்கையான மரணம் அல்ல என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் சாவ் பாலோ நீதிமன்றம் அவரது உடலை தோண்டி எடுத்து மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, கழுத்து எலும்புகள் முறிந்துள்ளதா என்பது குறித்தும், அவர் போராடிய போது நகங்களுக்கு அடியில் படிந்திருக்கும் மரபணு மாதிரிகள் குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

 

Related Stories: