ஈரோடு: காஞ்சிக்கோயில் பகுதியில் இரவு 10 மணியைக் கடந்து இயங்கிய உணவகத்தில் சென்று அங்கு வேலையில் இருந்த ஊழியரைத் தாக்கிய தலைமைக் காவலர் மோகன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு ஊரக உட்கோட்டம், காஞ்சிகோயில் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மோகன்குமார் (த.கா.2009) என்பவர் கடந்த 08.02.2026ம் தேதி காஞ்சிக்கோயில் 4 ரோடு அருகில் இயங்கி வரும் சஷ்டி பாஸ்ட் புட் கடையை இரவு 10.00 மணிக்கு மேல் இயங்கி கொண்டு வந்ததால், இரவு காஞ்சிக்கோயில் காவல் நிலைய ரோந்து அலுவலில் இருந்த மேற்கண்ட தலைமை காவலர் கடையை மூடவில்லை என்று கடையில் வேலை செய்துகொண்டிருந்த ராம்துலால் மோண்டல் என்பவரை சத்தம்போட்டு, தகாதவார்த்தையால் திட்டி, தாக்கியதாக கடையில் பதிவாகியிருந்த CCTV பதிவை கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி தலைமை காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார் என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
