அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் இந்திய விவசாயம் அழியும்: பி.ஆர் பாண்டியன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சந்தித்து பேசினர்.

இதன் பின்னர் பிஆர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;
உச்ச நீதிமன்ற நியமித்த நீதி அரசர் நவாப் சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். எம்எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வரவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறோம்.

மார்ச் மாதம் 19ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களுடைய முதல்வர்களை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகிறோம். அதன்படி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று சந்தித்து விவசாயிகளுடைய கோரிக்கைகளை முழுமையாக தெரிவித்தோம். அமெரிக்காவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அமைச்சர் பியூஸ் கோயல் எப்போதும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவார். அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால், இந்திய விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: