சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “கழுகு” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. மற்றும் “பெலிகன்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவிலிருந்து போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.
“கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல், UG-01 ஒப்பந்தத்தின் கீழ், “கழுகு” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து (Upline) சுரங்கம் அமைக்கும் பணியை ஜனவரி 2024-ல் தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை இன்று 09.02.2026 வந்தடைந்தது. இது இந்த ஒப்பந்தத்தின் கீழ் எட்டப்பட்ட முதல் முக்கிய மைல்கல்லாகும். கட்டம் 2 வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் UG-01 மற்றும் UG-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. M/s Cemindia Projects நிறுவனத்தால் 1,981 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்கம் அமைக்கும் பணி, சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், டொமினிக் சாவியோ பள்ளி, ரோசரி சர்ச் மற்றும் செயின்ட் ரபேல் பள்ளி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு அடியில் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது.
சுமார் 151 கட்டிடங்களுக்குக் கீழே செல்லும் இந்த வழித்தடத்தில், சுரங்கத்தின் ஆழம் 4.5 மீட்டர் முதல் 23 மீட்டர் வரை வேறுபடுகிறது. கடினமான பாறை அடுக்குகள் மற்றும் குறிப்பாக செயின்ட் ரபேல் பள்ளி அருகே ஏற்பட்ட எரிவாயு கசிவு (Gas leakage) போன்ற சவாலான புவியியல் நிலைகளை எதிர்கொண்டு, சுமார் 24 மாத கால அளவில் இந்தச் சுரங்கப்பாதை பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கழுகு சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 17 முறை அதன் வெட்டும் முகப்பில் (cutterhead interventions) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “பெலிகன்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவிலிருந்து போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
வழித்தடம் 4-ல் UG-02 ஒப்பந்தத்தின் கீழ், சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை (upline) சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதே பகுதியில் ஏற்கனவே (downline) தொடங்கப்பட்ட மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம், 1,898 மீட்டர் நீளத்தில் இதுவரை 370 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘பெலிகன்’ (Pelican) சுரங்கம் தோண்டும் இயந்திரம், பனகல் பூங்கா முதல் மீனாட்சி கல்லூரி வரை 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டில் உள்ள இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இப்பணியை முடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பிரிக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, தற்போது ‘போட் கிளப்’ (Boat Club) நிலையத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது மற்றும் இறுதியான சுரங்கம் தோண்டும் பணி இதுவாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்டப் பணியானது மிகவும் சவாலான பொறியியல் தொழில்நுட்பங்களைக் கொண்டது. குறிப்பாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முதல் கட்ட மெட்ரோ சுரங்கப் பாதைகளுக்கு அடியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 30.2 மீட்டர் ஆழத்தில் இந்த புதிய சுரங்கம் தோண்டப்பட உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.
